சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்பேரவை பொதுச்செயலருக்கு அம்பாறைக்கிளை அவசரமடல்!
காரைதீவு நிருபர்-இலங்கையில் உயிர்த்தஞாயிறன்று இடம்பெற்ற ஒரு தாக்குதலுடன் எமது கடந்தகால சமாதான முயற்சிகள் யாவும் பூச்சியத்திற்கு வந்துள்ளன. விரைந்து நடவடிக்கையில் இறங்கவேண்டும்!
சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் வண. எம்.தம்மஜோதி தேரருக்கு அம்பாறை மாவட்டக்கிளை மேற்கண்டவாறு அவசரமடலை அனுப்பிவைத்துள்ளது.
அம்பாறை மாவட்டக்கிளையின் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் பொதுச்செயலாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் அனுப்பிவைத்துள்ள மடலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
போலி சமயதீவிரவாதத்தால் ஆட்கொள்ளப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சிலர் செய்த கொடுரசெயலுக்கு முழுநாடும் கலங்கிநிற்கிறது. இதனை வன்மையாகக்கண்டிக்கிறோம். உண்மையான சமயத்துவம் மனிதநேயத்துடன் இயங்கிவருகிறது. அதற்காக மீண்டும் கைகோர்ப்போம்.
சில அரசியல்வாதிகள் இனவாத நஞ்சைக்கக்கி வருகிறார்கள்.
இலங்கை ஒரு பௌத்தநாடு என்பதில் மறுகருத்துக்கு இடமில்லை.இந்த நாட்டில் பௌத்தர்கள் கடந்த 26 நூற்றாண்டுகாலமாக வாழ்ந்துவருகிறார்கள். அதேவேளை ஏனைய சிறுபான்மையின மக்களுக்கான உரிமைகளையும் சமயங்களையும் மதிக்கவேண்டிய தார்மீககடமையுமுண்டு. அவர்களது அங்கீகாரத்தை வழங்கவேண்டும்
சுமார் 20நூற்றாண்டுகாலமாக தமிழ்மக்களது வரலாறு அமைகிறது. முஸ்லிம் மக்கள் 13நூற்றாண்டுகால வரலாற்றுடன்; வாழ்ந்துவருகிறார்கள்.
இந்நிலையில் முஸ்லிம்கள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டுமென சில அரசியல்வாதிகள் கூக்குரலிடுவதென்பது ஒரு சமயத்தின் இனத்தின் உரிமைகளை மிதிப்பதற்கு ஒப்பானதாகும்.
இலங்கை எமது நாடு. நாம்இங்குதான் பிறந்தோம். இங்குதான் மரணிப்போம். எனவே இத்தகைய இனவாதப்பேச்சுக்களுக்கு இடமளிக்காவண்ணம் நாம் சேர்ந்து மீண்டும் உயிர்ப்பாகச் செயற்படவேண்டிய காலகட்டம் வந்துள்ளது. எனவே உயர்பீடத்தைக்கூட்டுங்கள்.
இன்று சாய்ந்தமருதில் கூட்டமும் இப்தாரும்!
இதேவேளை சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்பேரவையின் அம்பாறை மாவட்டக்கிளை இன்று(19) ஞாயிற்றுக்கிழமை பிப 4மணிக்கு சாய்ந்தமருதில் தலைவர் டாக்டர் ஜெமீல் தலைமையில் கூடுகிறது.
கடந்த 10வருடத்திற்கும் மேலாக இவ்அமைப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் சென்று சமாதான நல்லிணக்கச்செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்தது.
பேருவளை அளுத்கம தாக்குதல் சம்பவத்தையடுத்து இவ்வமைப்பின் சர்வமத குழுவொன்று அங்கு சென்று சகலமதத்தலைவர்களையும் சந்தித்து சமாதான முயற்றிசகளில் ஈடுபட்டிருந்தமைதெரிந்ததே.
கடந்த 2வருடகால தொய்வுநிலைக்குப்பிறகு காலத்தின் அவசியம்கருதி முதற்றடவையாக மீண்டும் இன்று கூட்டப்படுவதாக செயலாளர் வி.ரி.சகாதேவராஜா தெரிவித்தார்.