போதைக்குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்


சுஐப் எம் காசிம்-
மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை சங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக் குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை சமீபகாலமாக அவதானிக்க முடிகின்றது. பொதுவாக பாதாள உலகத்தினருடன் தொடர்புள்ள சில முஸ்லிம் இளைஞர்களின் தொடர்பும் , சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் முஸ்லிம் வர்த்தகர்களின் பெயர்களும் இந்த போதைக் குற்றச்சாட்டுக்களால் வளைக்கப்படுகின்றமை முஸ்லிம்களின் சிவில் சமூக வாழ்க்கைக்கும் பெரும் அச்சுறுத்தலாகி வருகின்றன.காலிக் கடற் கரையில் கைப்பற்றப்பட்ட கப்பலில் பாரிய தொகையளவில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் பேருவளைப் பகுதிக்கு கொண்டு செல்லப்படவிருந்த, தகவல்கள் முஸ்லிம் சமூகத்தை இந்த வம்புக்குள் திணிக்கும் முயற்சிகளாகப் பார்க்கப்பட்டிருந்தன.ஆனால் இதற்குப்பின்னாலிருந்த தரகர்களின் விபரங்கள் முஸ்லிம் இளைஞர்களையும் இக்கடத்தல்களுடன் தொடர்புபடுத்தியிருந்தது.

பாதாள உலகத்தினரு டன் தொடர்புற்றிருந்த சிலர் நாளாந்த வாழ்க்கைப் பிழைப்பை ஓட்டிச்செல்வதற்கான வருமானமாக சில குற்றச் செயல்களைப் புரிவதாகவே இத்தனை காலமும் கருதப்பட்டு வந்தது.ஆனால் ஒப்பந்தக் கொலைகள்,கடத்தல்கள், கடல்வழிக் கொள்ளைகள் வெளிநாட்டு வங்கிகளில் நிதி,கிரடிற் கார்ட் மோசடிகளில் ஈடுபடுமளவிற்கு சில இளைஞர்கள் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் வெளியே வந்துள்ளன.

வடக்கு கடற்பரப்பு புலிகளின் பாதுகாப்பிலிருந்து கைநழுவியமை,போருக்குப் பின்னர் கடற்படையினரின் ரோந்து சேவைகள் பாரியளவில் குறைந்தமை ஆகிய இடைவெளிகளே கடல்வழியூடான போதைக் கடத்தல்களை அதிகரித்திருக்கும்.
சுதந்திரமாக விடப்பட்டுள்ள நாட்டின் கடற்பரப்பை பயன்படுத்தும் பாதாள உலகத்தினரின் செயற்படு தளம் பரந்து விரிந்துள்ள மைக்கு அண்மைக்கால கடத்தல்கள், கைதுகளை பாதுகாப்புத் தரப்பு ஆதாரங்களாக முன்வைக்கின் றது. வடக்கிலிருந்து கைப்பற்றப்படும் போதைப் பொருட்களும்,தெற்கில் கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள் நிரப்பிய கப்பல்களும் இதற்குப் பின்னாலுள்ள சர்வதேச வியாபாரிகளும், வெளிநாட்டு சக்திகளால் இயக்கப்படுவதாக முடிச்சுப்போடும் முயற்சிகளும் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இந்த முயற்சிகள் வெற்றியளிக்க வேண்டுமென்பதில் கடும்போக்காளர்கள் குறியாகச் செயற்படுவர். பொருளாதாரத்தில் முஸ்லிம்கள் முன்னணியில் திகழ்வதைத் தப்புக்கணக்கில் நோக்கும் சில பௌத்த,இனவாத கடும்போக்குகள் போதைக் குற்றச்சாட்டுக்களுக்குள் மூன்றாம் தேசத்தை வளைத்துப் போட, நீண்ட நாட்களாக எதிர் பார்த்துக் காத்துக்கிடக்கின்றன.

இந்நிலையில் துபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துர மதுஷின் பிரதான சகாக்காளென நம்பப்படும் முஸ்லிம் இளைஞர்களின் வகிபாகமே மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையை அந்நிய சமூகத்தினர் மத்தியில் சந்தேகத்திற்குரிய தாக்கியுள்ளது. இது தவிர தெமட்டகொடை, பஞ்சிகாவத்தை, மருதானை,மாளிகாவத்தை ஆகிய முஸ்லிம் பிரதேச இளைஞர்கள் கைதாவதும் இச்சந்தேகத்தை வலுவடையச் செய்துள்ளது.இந்தப் போதைக் குற்றங்களுக்குள் அகப்படும் முஸ்லிம் பெயர்களையுடைய இளைஞர்களின் பூர்வீகம், அவர்களது பழக்க வழக்கங்கள், சமய அனுஷ்டானங்களில் அவர்களுக்குள்ள பங்களிப்புகளை ஆராய்ந்து இவர்கள் பற்றிய சமூக அந்தஸ்த்தை, அடையாளங்களை தேசிய மட்டத்தில் உணர்த்தும் பொறுப்பிலிருந்து அரசியல் தலைமைகள் மாத்திரமன்றி மதத் தலைமைகளும் நழுவிவிட முடியாது. அந்தளவிற்கு குற்றச்சாட்டின் நிலைமைகள் கடினமடைந்துள்ளன.
போதைக் குற்றங்கள் மட்டுமன்றி,சைபர் குற்றங்களில் ஈடுபடுவதற்கும் இவ்வாறான இளைஞர்களின் மூளைகள் சலவை செய்யப்பட்டுள்ளதாக இது வரைக்கைதானோரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் நாட்டின் பாதுகாப்புத்துறையை எச்சரித்துமுள்ளது.பள்ளிவாசல்களில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்துமளவுக்கு பாதாள உலகக் கோஷ்டிக்குள் முரண்பாடுகள் வளர்ந்துள்ளதே. ஏன்? மாளிகாவத்தை,அப்பிள் தோட்டங்களில் அடிக்கடி இடம்பெறும் தனி நபர்களை இலக்கு வைத்த துப்பாக்கித் தாக்குதல்கள், போதைக்கடத்தல் வருவாய்களைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறென்றும், சாட்சிகளின் இரகசியங்களைப் பாதுகாப்பதற்கான பிரயத்தனங்களாகவும் இப்போது தெரிய வந்துள்ளது.
அரசியல் விவகாரங்களில் மாத்திரமன்றி சமூகத்தை சங்கடத்துக்குள்ளாக்கும் இவ்வாறான விடயங்களிலும் சமூகத்தலைமைகள் அக்கறை செலுத்தும் காலங்களிலே இப்போது மூன்றாம் சமூகம் காலடிவைத்துள்ளது.இன்றைய கால நிகழ்வுகள் இதனையே உணர்த்தி நிற்கின்றன.

ஹராம், ஹலால்,ஹபாயாக்கள் மதத் தீவிரவாதமென ஒரு காலத்தில் நெருக்குதலுக்குள் திணிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் பின்னர் வக்பு சட்டம்,ஷரீஆச் சட்டம், இளவயதுத் திருமணம், என்று சமய அனுஷ்டானங்களிலும் கெடு பிடிகளைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. இவ்வாறான கெடுபிடிகள், தீண்டல்களின் தொடர்ச்சிகள் தற்போது போதைவஸ்து, ஹெரோயின்,குடுக் கடத்தல்கள் என முஸ்லிம்களைத் தொடர்ந்து துரத்தி வருகின்றமை மூன்றாம் இனத்தினரை (முஸ்லிம்) அந்நிய மனோபாவத்தில் சிந்திக்க வைத்துள்ளது. உண்மையில் இந்த போதை வஸ்து வியாபாரக் கடத்தல்களுடன் முஸ்லிம் இளைஞர்கள் தொடர்புபட்டுள்ளனரா? அல்லது தெரியாமல் இவர்கள் மாட்டிக் கொள்கின்றனரா? இல்லாவிட்டால் பணம் இலகுவாகச் சம்பாதிக்க கடத்தல்களுக்குத் தரகர்களாகச் செயற்படுகின்றனரா? இவற்றையே முஸ்லிம் சமூக அமைப்புகள் கூட்டாக ஆராய வேண்டும்.
இந்த ஆராய்ச்சிகளின் தொகுப்பை சமூக ஆவணமாகக் கருதி பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கும் பொறுப்பும் முஸ்லிம் சமூகத் தலைமைகளுக்கு உள்ளது. இது தொடர்பான கூட்டுச் செயற்பாடுகளை பள்ளிவாசல் நிர்வாகங்கள்.உலமா சபை ,முஸ்லிம் அமைப்புக்கள் என்பன அரசியல் தலைமைகளுடன் இணைந்து செயற்படுத்துவதே எமது எதிர்காலம் மீதான நெருக்குதல்களிலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கும்.

ஒரு சில முஸ்லிம் இளைஞர்கள்,வர்த்தகர்களின் பொறுப்பற்ற போக்கிரிச் செயற்பாடுகளால் முழு முஸ்லிம்களதும் வர்த்தக நிலையங்கள், வீடுகள் பாதுகாப்பு படையினரால் சல்லடையாக்கப்படுவது சமூகமொன்றின் மீதான உரசல்களாகவே கருதப்படும்.
முஸ்லிம் நாடுகளில் இயங்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தொடர்பிலே இந்த போதை வஸ்துக் கடத்தல்கள் இடம் பெறுவதாக முடிச்சுப் போட சில கடும் போக்குகள் காத்திருப்பதாகவும் ஒரு தகவல்.

ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடைகளையும் மீறி ஐந்து வருடங்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தமை "பொப்பி" எனப்படும் ஒரு வகை போதை வியாபாரத்தால் என்பது பலரது அபிப்பிராயம்.

இவ்வாறு காட்டுவதனூடாக மூன்றாம் இனத்தின் இருப்பு,அமைதியைக் கெடுபிடியாக்கி இஸ்லாத்துக்கு எதிரான நிந்தனைகள், அழுத்தங்களை அதிகரிப்பதும் இப்போக்குகளின் எதிர்காலத் திட்டமாக இருக்கலாம். இத்திட்டங்களால் முஸ்லிம்களை அச்சுறுத்தி அவர்களின் உரிமைக் குரல்வளைகளை ஒடிப்பதற்கான சந்தர்ப்பங்களாகவே போதை வஸ்துக் கடத்தல்,வியாபாரங்ளில் முஸ்லிம்க ளுக்குள்ள தொடர்புகள் முடிச்சுப்போடப்படவுள்ளன. .இவ்வாறு போடுவதனூடாக சமூகச் சூறையாடல்களுக்கு எதிரான முஸ்லிம் தலைமைகளின் குரல்களை ஏதிலியாக்கவும் முயற்சிக்கப்படலாம்.புனித நோன்பு காலத்தை எதிர்நோக்கவுள்ள நிலையில் வீண் தர்க்கங்கள், சந்தேகங்களை களைவது மூன்றாம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் மீது சுமத்தப்பட்டுள்ள அவசர பொறுப்புக்களாகும்.
எனவே அரசியல் தலைமைகள்,மத அமைப்புகள் பள்ளிவாசல் சம்மேளனங்கள் இவ்விடயங்களில் அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டும். ஜும்ஆ பிரசாரங்களிலும்
போதை வஸ்து, சமூக மோசடிகள் குறித்து இஸ்லாம் வழங்கியுள்ள எச்சரிக்கைகளை அடிக்கடி ஞாபகமூட்டுவதும் ஒரு சமூகக் கடமையாக உள்ளதை எவரும் மறுக்க முடியாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -