ஓய்வின்றிய பயணத்தில் ஓய்வாக...?


எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி.
ரு மனிதன் தொடர்ச்சியான செயலிலிருந்து சிறிது நேரம் அல்லது சில காலம் விடுபடுவது, மாற்றுச்செயலில் ஈடுபடுவதும் ஓய்வாகப் பார்க்கப்படுகிறது. இன்றைய நவீன உலகில் மனிதனுக்கு ஓய்வென்பது இன்றியமையாதவொன்றாகவே காணப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் சமூகப்பணிகளில் தங்களை இணைத்துக்கொண்ட பலரின் வாழ்க்கையை நாம் பார்க்கிறோம். அவர்களால் சிறிது ஓய்வெடுக்கவும் நேரமிருப்பதில்லை. அரசியலைப் பொறுத்தளவில் மக்களின் அதிகாரங்களைப்பெற்று அவர்களின் ஊழியனாக சேவை செய்வதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் தங்களின் பயணங்களை ஓய்வின்றியே தொடர்ந்து செல்கிறார்கள்.

அரசியல் கட்சித்தலைவர்களை எடுத்துக்கொண்டால் குறிப்பாக, மர்ஹூம் பெருந்தலைவர் அஷ்ரஃப் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த தலைவராக இன்றும் பார்க்கப்படுகிறார். இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கம் உருவாகி, வளர்ச்சி காண்பதற்கு அவரின் ஓய்வின்றிய பயணமே காரணமாக அமைந்தது.

அரசியலில் அவர் மேற்கொண்ட தொடரான பயணம் போராளிகளையும் நோக்கி அவர் சொன்ன வாசகம் "போராளிகளே புறப்படுங்கள்
ஓரத்தில் நின்று கொண்டு
ஓய்வேடுக்க நேரமில்லை" என்பதனூடாக இந்த சமூக இயக்கத்தை உருவாக்குவதில் அவரின் முன்னெடுப்புக்கள், தியாகங்கள் போன்றவற்றை நம்மை உணரச்செய்வதாக அமைகிறது.
இன்று நம்மத்தியில் சிறு அமைப்புகளின் தலைவராக இருப்பவர்கள் அல்லது வட்டார ரீதியாக அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களைப் பார்த்தால் மக்கள் பணியில் பல சிரமங்களுக்கு மத்தியில் செயற்படுவதையும் காணலாம்.
ஆனால், தேசிய அரசியலில் ஈடுபடும் எமது தாய்க்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமைகளையும் எடுத்துக்கொண்டால் அன்று தொடக்கம் இன்று வரை ஓய்வின்றிய பயணத்தைத் தொடர்வதை நாம் காணலாம்.
மர்ஹும் தலைவரின் இறுதி நிலை எவ்வாறு அமைந்ததென்பதையும், இந்தக்கட்சி வளர்ச்சியில் அவரின் குடும்பத்தின் தியாகம் என்பவற்றைச்சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவரின் மறைவைத் தொடர்ந்து இந்தக்கட்சியின் பொறுப்பை எடுத்து இன்று வரை பல சவால்களுக்கு மத்தியில் ஓய்வின்றி தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களையும் இங்கு நாம் மறப்பதற்கில்லை.
தற்போதைய சூழ்நிலையில் முக்கிய தீர்மானங்கள் நாட்டில் மேற்கொள்ளப்படலாம். அவை சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளுக்குத்தீர்வு வழங்கும் நோக்கில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பவையாகக் காணப்படும் இச்சந்தர்ப்பத்தில், தமிழர் தரப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தங்களின் சமூகம் சார்ந்த விடயங்களைத் தெளிவாகப்பேசிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் அரசியல் அமைப்பினூடாக உள்வாங்கப்பட்டு முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தீர்வாக அவை வழங்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் சமூகத்திடம் காணப்படுகின்ற போதும், முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக வெளிப்படையாகப் பேசவில்லையென்பதுடன், சரியான முறையில் அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையிலும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் தொடர்பான விடயங்கள் உள்வாங்கப்படவில்லையென்ற ஆதங்கமும் முஸ்லிம் சமூகத்திடமிருக்கிறது.
ஆனாலும், முஸ்லிம் காங்கிரஸ் இந்த சமூகத்தின் பேரியக்கம் என்ற வகையில் முஸ்லிம்களின் பிரச்சனைகள் தொடர்பாக கவனஞ்செலுத்தி வருவதுடன், தங்களுக்கிருக்கும் தார்மீகக் கடமையைச் சிறப்பாக முன்னெடுக்க வேண்டுமென்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கடந்த 52 நாள் அரசியல் குழப்பமான காலப்பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுன் இணைந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், முஸ்லிம் சமூகம் தொடர்பான நல்லெண்ணத்தை நாட்டில் ஏனைய சமூகத்தவர் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவும் சேர்ந்து செயற்பட்ட விடயமானது, முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் பெரு வரவேற்பைப் பெற்றிருந்தது.

அத்துடன், எதிர்காலத்திலும் சமூகம் சார்ந்த விடயங்களில் இவ்வாறாக ஒற்றுமைப்பட்டுச் செயற்படும் போது, இலகுவாக அவைகளை அடைந்து கொள்ளக்கூடியதாக இருக்குமென்ற எண்ணமும் தோன்றியிருக்கிறது.

கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமையும் விமர்சனம் செய்து வாக்குகளைப் பெறுவதைக் இலக்காகக் கொண்ட குறுநில மன்னர்கள் சமீப காலமாக தங்களை அடக்கி வாசிப்பதைக் காணக்கூடியதாகவே இருக்கிறது.
இவை ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டுமென்ற நல்லெண்ணமா? அல்லது தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காகவும், அதன் போது ஏதும் தவறுகள் இடம்பெற்றால், அப்பழி தங்களில் வந்து விடாது பாதுகாத்துக் கொள்ளவதுடன், அவைகளை அப்படியே முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மீது சாட்டி விட்டு அதனை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்கான யுக்தியாகவும் இவர்கள் கையாளலாம்.
அத்துடன் ஒரு வேளை முஸ்லிம் காங்கிரஸின் நகர்வுகளில் சமூகம் நன்மையடைந்து கொள்ளுமாக இருந்தால், அதனை தங்களின் பங்களிப்புடன் தான் இவைகள் நடந்தன. இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் உரிமை கொள்ள முடியாதென்று பிரசாரங்களை இவர்கள் முன்னெடுப்பார்கள்.
பழி வந்தால் முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் முழுமையாக சுமக்கட்டும். நன்மை வந்தால் அதில் தங்களுக்கும் பங்கு தர வேண்டுமென்ற நிலைப்பாட்டினைக் கொண்டவர்களாக இவர்கள் இருக்கலாம். இவர்கள் விடயங்களில் கவனமாகச் செயற்பட வேண்டும்.
முஸ்லிம்களின் பிரச்சனையும் அவற்றுக்கான தீர்வுகளை அரசியல் ரீதியாகப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் மிகவும் கவனமாக, நிதானமாக முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைமையும் செயற்பட வேண்டுமென்பதோடு, முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதோடு, சில சந்தர்ப்பங்களில் மக்களையும் இவ்விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும். அப்போது தான் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளில் நம்பிக்கை ஏற்படுவதோடு, எதிர்காலத்தில் வீண் பழிகளிலிருந்தும் பாதுகாக்கப்படும்.

ஓய்வின்றிய பயணத்தில் ஓய்வெடுக்கும் நிலை நமக்கேற்படும் முன் நமது பணிகளைச் சிறப்பாக முடித்துக் கொண்டு மர நிழலில் ஓய்வெடுக்க புறப்படுவோம், சமூகத்தின் சிறந்த பிரார்தனைகளுடன்...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -