சாய்ந்தமருது
அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது நீர்வழங்கள் முகாமையாளர் காரியாலயம் (Regional Manager’s Office) சாய்ந்தமருதில் திறப்பதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுகையில், அதனை தடுக்கும் விதமாக அக்கரைப்பற்றில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
சில மாவட்டங்களை தவிர, நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் ஒவ்வொரு காரியாலயங்கள் இருக்கின்ற நிலையில், எமது மாவட்டத்தினுள் மூன்றாவது காரியாலயம் திறந்தாள் எதிர்காலத்தில் அக்கரைப்பற்றில் இருக்கின்ற இரண்டாவது காரியாலயமும் இல்லாமல் போய்விடும் என்பதுதான் ஆர்ப்பாட்ட காரர்களின் நியாயப்படுத்தலாகும்.
அண்மையில் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனமும் ஒன்றுகூடி சாய்ந்தமருதில் RM காரியாலயம் திறப்பதற்கு எதிராக அறிக்கைகளை விடுத்திருந்தார்கள்.
முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் பின்னணி செயல்பாடுகள் மூலமாகவே இவ்வாறான தடுக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
இதற்காக என்னதான் போலியான காரணங்களை கூறினாலும், இவைகளுக்கு பின்னணியில் பிரதேசவாதம் என்ற கொடிய நோய் உள்ளது என்பதனை யாராலும் மறுக்க முடியாது.
அம்பாறை, அக்கரைப்பற்று ஆகிய இரண்டு முகாமையாளர் காரியாலயத்தில் அக்கரைப்பற்றின் கீழ் சுமார் 80 ஆயிரம் இணைப்புக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. அதில் நாற்பது ஆயிரம் இணைப்புக்கள் கல்முனை பிரதேசத்துக்குரியது.
அம்பாறை பிராந்திய காரியாலயத்தின் கீழ் இருக்கின்ற சம்மாந்துறை பிரதேசத்தில் மட்டும் சுமார் 17 ஆயிரம் இணைப்புக்கள் இருக்கின்றது.
சம்மாந்துறை மக்கள் தங்களது அலுவல்களை நிறைவேற்றுவதற்கு அம்பாறைக்கு செல்ல வேண்டி உள்ளதானாலும், அங்கே மொழிப்பிரச்சினைகள் ஏற்படுவதாலும் பல சிரமங்களை அம்மக்கள் எதிர்கொள்கின்றார்கள்.
சம்மாந்துறை மக்களின் வேண்டுகோளின் பேரில், அவர்களது தேவைகளை இலகுவாக்கிக்கொள்ளும் பொருட்டு சம்மாந்துறையின் 17 ஆயிரம் இணைப்புக்களையும், கல்முனை பிரதேசத்தின் 40 ஆயிரம் இணைப்புக்களையும் ஒன்றாக சேர்த்து புதிதாக மூன்றாவது RM காரியாலயத்தினை சாய்ந்தமருதில் அமைப்பதற்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் தீர்மானித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிந்து தனியாக அம்பாறை மாவட்டம் உருவானபோது, அம்பாறை மாவட்டத்தின் பழமை வாய்ந்த நகரமாக கல்முனை காணப்பட்டதனால், அங்கேயே அனைத்து காரியாலயங்களும் ஸ்தாபிக்கப்பட்டது. பின்புதான் அம்பாறை நகரம் அபிவிருத்தி செய்ப்பட்டு காரியாலயங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டதுடன் புதுப்புது காரியாலயங்களும் உருவானது.
கல்முனை முஸ்லிம்களின் பழமைவாய்ந்த நகரம் என்பதனாலேயே அதனை முஸ்லிம்களின் தலைநகர் என்றும், கல்முனையை தலைநகராக கொண்டே கரையோர மாவட்டம் உருவாக்க வேண்டும் என்றும் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் விரும்பினாரே தவிர, அது தனது ஊர் என்பதற்காக அல்ல.
ஆனால் அம்பாறை மாவட்டத்துக்கு அக்கரைப்பற்றுதான் மத்திய பிரதேசம் என்றும் அங்குதான் அனைத்தும் அமையவேண்டும் என்று அதாஉல்லாஹ் கூறுகின்றார். அப்படியென்றால் தெஹியத்தக்கண்டி வரைக்குமான அம்பாறை மாவட்டத்தின் மத்திய பிரதேசம் பதியதலாவை ஆகும். எனவே அம்பாறை மாவட்டத்தின் அனைத்து காரியாலயங்களையும் பதியத்தலாவையில் அமைத்திருக்கலாமே!
அதுமட்டுமல்லாது இலங்கையின் மத்திய இடம் கண்டி எனவே நாட்டின் தலைநகராகவும், ஏனைய நாட்டின் அனைத்து தலைமை செயலகத்தினையும் கண்டியில் அமைத்திருக்கலாமே!
அக்கரைப்பற்று அம்பாறை மாவட்டத்தின் மத்திய பிரதேசம் என்று அதாஉல்லாஹ் அவர்கள் கூறுவதானது தனது பிரதேசவாத சிந்தனையை வெளியே காட்டிக்கொள்ளாமல் மறைப்பதுடன், முஸ்லிம்களின் தலைநகரான கல்முனையை அடியோடு அழிக்கும் நடவடிக்கைக்காக மக்களிடம் நியாயம் கற்பிப்பதாகும்.
எனவே தான் நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சராக பதவியேற்று ஒரு இணைப்புக்கூட இல்லாத அக்கரைப்பற்றுக்கு பிராந்திய முகாமையாளர் காரியலயத்தினை கொண்டுவர முடியுமென்றால், சுமார் ஐம்பத்தி ஏழாயிரம் இணைப்புக்கள் கொண்ட பிரதேசத்துக்கு ஏன் தனியான RM காரியாலயம் உருவாக்கக்கூடாது ?
தனியாக RM காரியாலயம் சாய்ந்தமருதில் அமைகின்றபோது அக்கரைப்பற்றில் இருக்கின்ற RM காரியாலயத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்ப்படாது. அவ்வாறு எதிர்காலத்தில் பாதிப்புக்கள் ஏற்ப்படும் என்பது பிரதேசவாதத்தை ஏற்படுத்துவதற்காக அக்கரைப்பற்று மக்களை தூண்டும் நடவடிக்கையே தவிர வேறு ஒன்றுமில்லை.