தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற தமிழ் தின போட்டி நிழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் பெருவிழா கடந்த சனிக்கிழமை மாத்தளை இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் மத்திய மாகாண ஆளுனர் பீ.பீ.திஸாநாயக , வட மத்திய மாகாண ஆளுனர் எம்.பி.ஜயசிங்க , இலங்கைக்கான இந்திய உதவி உயர் ஸ்தானிகர் ( கண்டி)திரேந்திர சிங் , கல்வியமைச்சின் உயர் அதிகாரிகள் ,மத்திய மாகாண கல்வித்திணைக்கள உயர் அதிகாரிகள் , மாத்தளை கல்வி வலய கல்வி அதிகாரிகள் , மாத்தளை மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் , இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த பாடசாலை அதிபர்கள் , அசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையில் இருந்து காலை 9.00 மணியளவில் ஆரம்பமான மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பங்குபற்றுதலுடன் கூடிய ஊர்வலம் மாத்தளை – தம்புள்ள பிரதான வீதி வழியாக மாத்தளை இந்து கல்லூரி மைதானத்தை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் இந்து , இஸ்லாமிய ,பௌத்த கலாசாரத்தை பிரதி பலிக்கக்கூடிய பல நிகழ்வுகள் இடம்பெற்றன.