திருகோணமலை கன்னியா காயத்திரிஅம்மன் கோயில் வீதிக்கு பின்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலமொன்று இன்று (02) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னியா காட்டுப்பகுதிக்குள் விறகு எடுக்கச்சென்ற நபர் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 எனும் இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
குறித்த சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் முழங்கால் இரண்டும் பூமியில் பட்டுக்கொண்டிருப்பதையும் சாரம் மற்றும் பெணியன் உடம்பில் காணப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.
சொக்லேட் கலரிலான இரண்டு பாதணிகளும் சடலத்திற்கு 10 மீட்டருக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாகவும் இன்னும் அவர் அணிந்திருந்த சேட் கைக்குட்டை மற்றும் முஸ்லிம் சகோதரர்கள் அணியக்கூடிய தொப்பியொன்றும் சடலத்திற்கு சற்று தொலைவில் காணப்படுவதாகவும் சேட் பக்கட்டுக்குள் திருகொணமலையிலிருந்து கன்னியாவிற்கு 07ம்மாதம் 10ம் திகதி பெறப்பட்ட பஸ் டிக்கட்டும் பெறப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொங்கிய நிலையில் உரிய இடத்தில் காணப்படுவதுடன் சடலத்தை பார்வையிட நீதவான் நேரில் வரவுள்ளதாகவும் அதனையடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய பரிசோதனைக்காக கொண்டு செல்லவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இது ஒரு கொலையாக இருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் இச்சடலம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகளை உப்புவௌி பொலிஸார் மேற்கொண்டு வருகிக்றனர்.