ஊடகப்பிரிவு-
யாழ்நகரில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்கள் இன நல்லுறவுக்கு பங்கம் ஏற்படும் வகையிலான
செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து வாழ வேண்டும் என்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட்
பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.
யாழ்ப்பாண முஸ்லிம்களை நேற்று முன்தினம் (22.07.2018) ஒஸ்மானியா கல்லூரியில் சந்தித்து கலந்துரையாடிய
போதே அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். இலங்கையிலே முன்னர் புகழ் பெற்று விளங்கிய யாழ்
முஸ்லிம் குடியிருப்பு பகுதியான சோனகத்தெருவில் வாழ்ந்தவர்கள் வர்த்தகத் துறையில் மாத்திரமன்றி,
கல்வித்துறையிலும் பிரகாசித்தவர்கள்.
சுமார் 3 தசாப்த காலத்துக்கு முன்னர் இடம்பெற்ற வெளியேற்றத்தின் காரணமாக இந்தப் பகுதிகளில்
வாழ்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது நீர்கொழும்பு, புத்தளம், பாணந்துறை என்று சிதறி
வாழ்கின்றனர்.
யுத்தம் முடிவின் பின்னரான அமைதி திரும்பிய பின்னர் இந்தப் பிரதேசத்தில் முன்பு வாழ்ந்த மக்களில் சொற்ப
தொகையினர் மீண்டும் இங்கு வந்து குடியேறியுள்ளனர். எனினும், போதும் காணிப்பிரச்சினையும், வீடு இல்லாத
பிரச்சினையும் பிரதானமாக அவர்களை வாட்டிவதைக்கின்றது. அதுமாத்திரமன்றி, வாழ்வாதாரத்திற்கும் பெரும்
கஷ்டமாக இருக்கின்றது.
வடக்கிலே யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவிலுமே இந்தக் காணிப்பிரச்சினை அதிகளவில் இருக்கின்றது.
இவற்றை தீர்ப்பதற்கு நாம் பல்வேறு சவால்களையும், தடைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. எமக்கு கிடைத்த
புள்ளி விபரங்களின்படி சுமார் 355 முஸ்லிம் குடும்பங்களுக்கு காணி மற்றும் வீடுகள் இல்லாத நிலையுள்ளது.
எனினும், பல்வேறு தடைகளையும் தாண்டி இவற்றை தீர்த்துவைக்க முயற்சி செய்து வருகின்றோம்.
காணிப்பிரச்சினை தீராதவரை வீடுகளை பெற்றுக்கொள்வதில் கஷ்டம் இருக்கின்றது. இந்தப் பிரச்சினை
தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா
ஆகியோருடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றோம். அத்துடன் சில இடங்களை அடையாளப்படுத்தி
உரிய அனுமதிக்காக காத்திருக்கின்றோம்.
எனது அமைச்சின் கீழ் சுயதொழில் வாய்ப்புக்களை மேற்கொள்வதற்காக, நடைமுறைப்படுத்திவரும் பல்வேறு
திட்டங்களில் இந்த பிரதேச மக்களையும் உள்வாங்கி நடவடிக்கை எடுக்கமுடியும். எந்தவிதமான அரசியல்
உள்நோக்கமுமின்றி, மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக நலன் கருதியே நாம்
இப்பிரதேசங்களுக்கு அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றோம்.
முஸ்லிம் பிரதேசங்களின் தற்போதைய காவலர்களாக இருக்கும் நீங்கள், பல்லின சமூகம் வாழும் இந்த
மாவட்டத்தில் பண்புடனும், அந்நியோன்ய உறவுடனும் வாழப்பழகிக் கொள்ளவேண்டும். ஒருவர் செய்யும்
தவறு, முழுச் சமூகத்தையும் பாதிப்படையச் செய்வது மாத்திரமன்றி, நம்மை பற்றிய பிழையான எண்ணங்களை
மாற்று சமூகத்தினரிடம் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொண்டு நீங்கள் செயற்படவேண்டும். இவ்வாறு
அமைச்சர் கூறினார்.
இந்தச் சந்திப்பின் போது, ஒஸ்மானியா கல்லூரி அதிபர் ராஜீ, யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம். நியாஸ்
நிலாம், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் அஷ்கர் ரூமீ, அமைச்சரின் யாழ் மாவட்ட திட்ட இணைப்பாளர்
முஜாகித் நிசார், அமைச்சரின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ரொக்கிஸ் ஆகியோர் உட்பட பலர்
கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பின் பின்னர்; அமைச்சர், யாழ் புதிய சோனகத்தெருவிற்கு சென்று, அங்கு வாழும் மக்களின்
பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.