ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் மறைவு இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பங்களிப்பு செய்துவருவோர் வரிசையில் நிரப்பமுடியாத ஒரு இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவரது மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளதாவது;
நாட்டின் நன்மைகருதி புகழ்பூத்த பேராசிரியர் விமலரத்ன தேரர் கடந்து வந்த கரடுமுரடான பாதையை எனது தீவிர தேர்தல் பிரசாரத்தில் சில நிமிடங்களை ஒதுக்கி நான் திரும்பிப்பார்க்கிறேன். பெல்லன்வில ராஜமகா விகாரையில் இருந்துகொண்டு இனங்களுக்கிடையான புரிந்துணர்வை வளர்ப்பதில் தீவிர ஆர்வலராகவும், உன்னத செயற்பாட்டாளராகவும், தமது சொல்லாலும் செயலாலும் சான்று பகன்ற தேரர், சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் அவர் விளங்கினார்.
எல்லாவறுக்கும் மேலாக, அவரை இலங்கையிலுள்ள சமய நல்லிணக்க அமைப்பின் இன்றியமையாத வழிகாட்டியாக நான் அறிந்திருக்கிறேன். அண்மைக்காலத்தில் இந்தோனேசியாவில் ஜகர்த்தா, போரோபூதுர் உயர்மட்ட பௌத்த மாநாட்டில் ஒரு முஸ்லிம் பேச்சாளராக கலந்துகொண்ட நான், மறைந்த தேரரருடன் அங்கு நெருங்கிப்பழகும் வாய்ப்பை பெற்றது மட்டுமல்ல, பரஸ்பரம் கருத்துப்பரிமாற்றம் செய்யும் சந்தர்ப்பமாகவும் அது வாய்த்தது.
அவ்வப்போது நாங்கள் நாட்டில் வாழும் பல்லின சமூகங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும், ஒற்றுமையும் மிகவும் பலமாக கட்டியெழுப்புவதில் கரிசணை செலுத்தவேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தினார். நேரிலும் தொலைபேசியிலும் உரையாடியதையும் அவரிடமிருந்து உரிய ஆலோசனைகளை பெற்றதையும் நன்றியறிதலுடன் இந்த துயரகரமான சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
நேர்மையான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து மறைந்த பேராசிரியர் விமலரத்ன தேரரின் மறைவில் நாட்டு மக்களுடன் இணைந்து தனிப்பட்ட முறையிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பிலும் நானும் பங்கு கொள்கிறேன்.