பி.எம்.எம்.ஏ.காதர்-
நேர்மையான கலப்படமற்ற அரசியல் பாதையை நோக்கி நாம் பயணிக்கிறோம் இந்தப் பயணத்தில் இளைஞர்கள் இணைய வேண்டும்.
மருதமுனை பிரதேசம் நேர்மையான கலப்படமற்ற அரசியல் பாதையை நோக்கி நகருகின்ற ஒரு உன்னதமான தருணத்தில் நாம் பயணிக்கிறோம் இந்தப் பயணத்தில் இளைஞர்கள் இணைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் மருதமுனை 3ஆம் வட்டாரத்தில் போட்டியிடம் வேட்பாளர் வை.கே.றகுமான் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
மருதமுனை 3ஆம் வட்டாரத்தில் (15-01-2018)நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர்; இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-இன்றைய இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு நல்ல வழிகாட்டல்களைச் செய்ய வேண்டியது சமூகத்தின் பெறுப்பாகும்.
ஆனால் சில அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களில் இளைஞர்களை கறிவேப்பிலையாகப் பயன்படுத்தி விட்டு தூக்கி வீசிவிடுகின்றார்கள் இதனால் பல இளைஞர்கள் விரக்தியுற்ற நிலையில் தவறான வழியில் பயணிக்கின்றார்கள். அவ்வாறானவர்களை நல்வழிப்படுத்துவதில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் முன்னின்று செயற்படுகின்றார்.
மருதமுனையில் பல கட்சிகளில் இணைந்து செயற்பட்டவர்கள் அக்கட்சிகளின் செயற்பாடுகள் திருப்பியளிக்காமையினால் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு இணைகின்றவர்களை நாங்கள் கௌரவமாக வரவேற்கின்றோம் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு காலக்கிரமத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.