காரைதீவு நிருபர் சகா-
காரைதீவு பிரதேசசபைக்கான தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் சிவ.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஊர்த்தீர்மானத்திற்கு மதிப்பளித்து போட்டியிடுவதில்லை என தெரிவித்துள்ளது.
ஊர்ப் பொதுமுடிவை மதித்த முதலாவது அரசியல்கட்சி இக்கட்சியாகும் என அதன் காரைதீவுப்பிரதேச அமைப்பாளர் கே.குமாரசிறி தெரிவித்தார்.
காரைதீவுப்பிரதேச அமைப்பாளர் குமாரசிறி மேலும் கூறுகையில்: 'கட்சி தலைமை எந்த அரசியல் அதிகாரத்திற்கும் ஆசைப்பட்டதல்ல. என்னால் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெறா விட்டாலும் கணிசமான வாக்குகளை பிரிக்க முடியும்.
அந்த துரோகத்தை என் மண்ணுக்காக செய்யவில்லை. நான் எனது சமூகத்தை மதித்து நடப்பவன்.எமது தலைவர் பிள்ளையான் காரைதீவு மண்ணில் பற்றுள்ளவர் என்பதனை பலமுறை நிருபித்துள்ளார். எனது வேண்டுகோளையும் ஏற்று இம்மண்ணின் இறைமைக்கு ஆதரவாக முடிவெடுத்துள்ளார்.
மற்றைய அரசியல் கட்சிகளுக்கு இதுவே உதாரணம்.
த.ம.வி.பு.கட்சியின் பொதுச்செயலாளர் கருத்துதெரிவிக்கையில்:
'இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி திருக்கோவில் ஆலையடிவேம்பு நாவிதன்வெளி பிரதேசசபைக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியிருந்தது.
காரைதீவு பிரதேசத்தில் அங்குள்ள பொது அமைப்புகள் இணைந்து எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைவாகவும் அப்பகுதியில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவும் தமிழ் மக்கள் விடுதலைகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தனின் அறிவுறுத்தலுக்கு அமைய காரைதீவு பிரதேசசபைக்கு போட்டியிடவில்லை.
ஏனைய பகுதிகளில் தனித்துவமாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிடுகின்றது.' என்றார்.

