தம்மீது குற்றஞ்சாட்டுபவர்களுக்கு வௌிப்படையாக தமது நிதியொதுக்கீடுகள் தொடர்பில் நிருபீக்கத் தயாராகவே இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன் போது கூறினார்,
தாம் கூறாத ஒரு விடயத்தை வைத்து தமது அவதூறு அரசியலை செய்து தனது நிலையை மத்திய அமைச்சர் தாழ்த்திக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
மட்டக்களப்பு ஏறாவூர் அரபா வித்தியாலத்திற்கு 90 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே கிழக்கு முதலமைச்சர் இதனைக் கூறினார்,
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர்,
மத்தியிலுள்ள அமைச்சரொருவர் அண்மையில் கிழக்கைப் பற்றி சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்,முதலில் வடக்கு கிழக்கிற்கு வந்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராயுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கள் இணைந்தே ஆட்சியமைத்துள்ளோம்,ஆகவே எம்மிடையே நிதிகள் சமமாக பகிரப்படுகின்றன.
மாகாணத்துக்கு பகிரப்படும் நிதிகள் ஒவ்வொரு பிரதேசங்களுக்கு சமமாகவே பகிரப்படுகின்றன,
எனக்கு அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் அபிவிருத்தி நிகழ்வுகளில் பங்கேற்க நேரம் கிடைப்பதில்லை . தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளினால் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆகவே பெரும்பாலும் சில பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகளிலேயே நான் பங்கேற்பதால் ஊடகங்களிலும் அவையே காண்பிக்கப்படுவதால் நான் குறித்த பகுதிகளுக்கு மாத்திரமே அபிவிருத்திகளை முன்னெடுப்பதாக ஒரு தோற்றப்பாடு உள்ளது,
ஆனால் நாம் யாருக்கும் பக்கசார்பாக நிதிகளை ஒதுக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன,எம்மீது குற்றஞ்சுமத்துபவர்கள் முடிந்தால் அதனை நிருபீக்கட்டும் என சவால் விடுகின்றேன்,
அதைவிடுத்து சவாலை ஏற்க முடியாமல் நாகரிகமில்லாமல் அவதூறுகளை பரப்புவதை விடுத்து இங்கு வந்து நாகரிகமான வார்த்தைகளை உபயோகித்து அரசியல் செய்வதற்கு கற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.