குறித்த மதுபானசாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த நல்லதம்பி நித்தியானந்தன் மற்றும் புண்ணியமூர்த்தி சசிதரன் ஆகிய இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற விசாரணையில் திருப்தி இல்லாத காரணத்தினாலும் பொலிஸ் மா அதிபருக்கு குறித்த விசாரணை தொடர்பான நம்பகத்தன்மையில்லை என்பதாலும் நேற்றும் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இரு ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தாக்குதலுக்குள்ளான இரு ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுத்ததாக வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்தது.
கல்குடா எத்தனோல் உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிப்பிற்கு சென்ற நியூஸ்பெஸ்ட் பிராந்திய செய்தியாளர் நல்லதம்பி நித்தியானந்தன், சுதந்திர ஊடகவியலாளரும் எமது இணையத்தளத்தின் பிரதேச ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் ஆகியோர் மீது கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
ஜூலை மாதம் 10 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அண்மையில் அமைச்சர் அமீர் அலி பாராளுமன்றில் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த மதுபானசாலையின் ஊடாக ஒருசில வேலை வாய்ப்புக்கள் இருப்பதாகவும் மதுபானசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைவது நன்மை தரும் என கூறிக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களை புத்திஜீவிகள் என அடையாளப்படுத்திக் கொண்டு ஒரு சிலர் உள்ளனர்.
இவ்வாறானவர்களின் செயற்பாடு காரணமாக, மாவட்டத்தில் பல விமர்சனம் எழுந்துள்ள வேளையில் குறித்த மதுபான தொழிற்சாலை அமைக்கப்படுவதை நிறுத்தக்கோரி மக்களோடு மக்களாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன் ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டின் ஜனாதிபதி கல்குடாவில் அமைக்கப்படும் குறித்த மதுபானசாலை உற்பத்தி தொழிற்சாலையை நிறுத்துவதாக எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கியிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.(வீ)