இலங்கையை பொறுத்த வரை புவியியல் ரீதியாக கிழக்கு மாகாணம் மட்டுமே அரசியல் ரீதியில் முஸ்லிம்களின் பலம் பொருந்திய மாகாணமாக உள்ளது என்று உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களை ஆளுகின்ற ஒட்டு மொத்த பலமும் கிழக்கில் தான் இருக்கின்றது என்பது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம்களின் தனி வாக்குகளால் ஒரு முஸ்லிமை தேர்ந்தெடுக்கக்கூடிய பலம் இங்கு மட்டுமே காணப்படுகிறது. இதன் காரணமாக ஏனைய இனங்களின் தேவை இன்றி சுயமாக செயற்படும் பலத்தை கிழக்கில் மட்டுமே ஒரு முஸ்லிம் கட்சியால் இன்றைய சூழலில் பெற முடியும்.
கிழக்கை தலைமையகமாகக் கொண்டு ஒரு முஸ்லிம் கட்சியை கிழக்கு மக்கள் ஒருமித்து பலப்படுத்தினால் அதன் மூலம் தமக்கும் ஏனைய மாகாணங்களில் மிகச்சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்காகவும் எதுவித அச்சமுமின்றி குரல் கொடுக்கும் தலைமையை உருவாக்க முடியும். அதுவும் உலமாக்கள் தலைமையே மிகச்சிறந்ததாகும்.
இவ்வாறான தமது வாக்குப்பலத்தை காட்டி முஸ்லிம்களுக்கான உரிமைகளை இலகுவாக பெற முடியும். பொதுவாக அரசாங்கங்கள் துப்பாக்கிக்கு இலகுவில் பயப்பட மாட்டாது. ஆனால் மக்களின் வாக்குப்பலத்துக்கு அஞ்சுவார்கள். அத்தகைய வாக்குப்பலம் என்பது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கைகளில் இருந்தும் இன்று அது குரங்கின் கையில் பூமாலை போன்ற நிலையில் உள்ளது. கிழக்குக்கு வெளியிலும் முஸ்லிம் தலைவர்கள் நிச்சயம் இருக்கத்தான் வேண்டும். அத்தகைய தலைவர்களில் சமூக அக்கறையுள்ளவர்களுடன் கிழக்கு முஸ்லிம் சமூக அரசியல் தலைமை இணக்க அரசியலை செய்ய வெண்டும்.
கிழக்குக்கு வெளியே முஸ்லிம் தலைமைகள் இருக்கக் கூடாது என நாம் சொல்லவில்லை. ரிசாத் பதியுதீன் போன்ற சமூக அக்கறையுள்ள தலைவர்கள் இருப்பதும் சமூகத்துக்கு பலமாகும். ஆனாலும் வாக்குப்பலம் கொண்ட கிழக்கு முஸ்லிம்களுக்கு கிழக்கை தலைமையகமாகவும் தளமாகவும் கொண்ட கட்சியால் மட்டுமே கிழக்கின் வாக்குப்பலத்தை அரசியலில் பாவித்து வெற்றி பெற முடியும் என்பது இந்த பதினாறு வருட இழப்புக்களிலிருந்து நாம் பெற்ற படிப்பினையாகும்.
கிழக்கில் சுமார் 4 லட்சம் முஸ்லிம் வாக்குகள் உள்ளன.
இவற்றில் அரைவாசிப்பேர் கிழக்கு தலைமையிலான கட்சியில் ஒன்று பட்டால் போதும் அந்தப்பலத்தினூடாக இரண்டு தேசியபட்டியல் எம் பீக்களை பெற முடியும். அதே போல் இன்ன பல பதவிகளையும் கிழக்குக்கு கொண்டு வர முடியும்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்குத்தான் முஸ்லிம் சமய விவகார அமைச்சும் பொருத்தமானதாகும். அது ஒரு மௌலவிக்கு வழங்கப்படுவதுதான் மிகச்சிறந்ததாகும். ஆனால் நாம் இது அத்தனையையும் இழந்து நிற்க காரணம் நாம் நமது வாக்குப்பலத்தை உணராததும் இன்னுமின்னும் நம்மை ஏமாற்றி வயிறு வளர்க்கும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தின் பின்னால் கண்ணை மூடிக்கொண்டு செல்வதுமாகும்.
அறுவைக்காக கொண்டு செல்லும் ஆட்டுக்கு அதன் உரிமையாளனின் கையில் இருக்கும் அகத்திக்கீரைதான் கண்ணில் தெரியுமே தவிர அவன் பின்னாலிருக்கும் கத்தி தெரியாது. இவ்வாறுதான் கிழக்கு மக்கள் ஒரு மோசமான தலைமையினால் வஞ்சிக்கப்பட்டு இன்று கழுத்தறு பட்ட நிலையில் உள்ளனர். இந்த உண்மைகளை உலமா கட்சி பல வருடங்களாக பேசி வருகிறது.
ஆனாலும் சுய நல வெறி பிடித்த எட்டப்பர் கூட்டம் எம்மைப்பற்றி மோசமாக மக்களிடம் சித்தரித்து கிழக்கு மக்கள் சுதந்திரமாக சிந்திப்பதை தடுத்து வருகின்றனர்.
இன்று இத்தகைய பலருக்கு மிக தாமதமாக ஞானம் ஏற்பட்டு கிழக்குக்கு தலைமை தேவை என்ற உண்மையை உணர்ந்துள்ளார்கள். இதன் மூலம் உலமா கட்சி கடந்த பத்து வருடங்களாக சொல்வது உண்மை என்பது இவர்களின் கழுத்துக்கு கத்தி வந்த போதுதான் இவர்களுக்கு அறிவு வந்து தெரிய வந்துள்ளது.
இதே போன்று கிழக்கு மக்களும் தமது கழுத்துக்கு கத்தி வருமுன் தமது சிந்தனைகளை தட்டி விட வேண்டும். நம்மிடம் என்ன தகுதி இல்லை. என்ன திறமை இல்லை. நமது வாக்குப்பலத்தை தனியாக சேகரித்தால் ஒரு விவசாயித்தலைவன் கூட சாதித்து வருவான். மறைந்த தலைவர் அஷ்ரஃப் காலத்தில் இந்த உண்மையை அவர் சொன்ன போது கிழக்கில் உள்ள எந்த செல்வந்தரும் இதனை கேட்கவில்லை. பலரும் அவரது கூற்றை பகிடியாகவே பார்த்தனர். இதனால்த்தான் புஹார்தீன் என்ற பெருமகன் அஷ்ரஃபுக்கு பொருளாதார பலம் கொடுத்து தேசிய பட்டியல் எம்பியானார்.
கிழக்குக்கு வெளியே உள்ள மக்களில் மிகப்பெரும்பான்மையானோர் நல்லவர்கள். தியாக மனப்பான்மை உள்ளவர்கள். ஆனால் தனியான அரசியல் பலம் அற்றவர்கள். ஓரிருவரை தவிர மற்றவர்கள் கிழக்கு மக்களை கறிவேப்பிலையாக பாவிப்பதில் வல்லவர்கள்.
ஆகவே கிழக்கு மக்கள் தமது கிழக்கு தலைமையிலான கட்சியை பலப்படுத்தி தென்னிலங்கை மக்களுக்கும் குரல் கொடுக்கும் கடப்பாடு உள்ளது. அத்துடன் கிழக்கு தலைமையிலான கட்சி ஏனைய முஸ்லிம் தலைமைகளில் சமூகத்துக்காக செயற்படக்கூடிய தலைமைகளுடன் புரிந்துணர்வுடன் செயலாற்ற வேண்டும். இதனையும் உலமா கட்சி வெறும் பேச்சுடன் நிற்காது செயலிலும் காட்டிக்கொண்டிருக்கிறது. அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அ. இ. மக்கள் காங்கிரசை இனங்கண்டு அதனுடன் முதலில் இணைந்து கொண்ட கட்சி உலமா கட்சியாகும்.
எனவே கிழக்குக்கு விடிவு ஏற்பட வேண்டுமாயின் கிழக்கு முஸ்லிம் மக்கள் தமது சிந்தனைகளை தட்டி விடவேண்டும். உங்களின் எழுச்சிதான் நமது இந்தப்புரட்சியை வென்றெடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.