இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது:
அண்மையில் அமெரிக்க தூதுவராலயத்தின் ஏற்பாட்டின் மூலம் காத்தான்குடியில் நடைபெற்ற இப்தாரின் போது தன்னை சந்தித்த முஸ்லிம் பெண்கள் இலங்கையில் உள்ள இஸ்லாமிய திருமண சட்டத்தில் திருத்தம் தேவை என தன்னிடம் சொன்னதாக அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அமெரிக்க தூதுவரிடம் சென்று இஸ்லாமிய திருமண சட்டம் பற்றி பேசுவது முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் துரோகம் என்பதை உலமா கட்சி மட்டுமே கண்டித்திருந்தது.
மேற்படி சந்திப்பில் கலந்து கொண்ட காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருமான சல்மா ஹம்ஸா இது பற்றிய அவரது அறிக்கையில் தான் அமெரிக்க தூதுவரிடம் இஸ்லாமிய திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரவில்லை என்றும் பெண் காதி நீதிவான் பற்றிய எனது அதிருப்தியை வெளியிட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இஸ்லாமிய திருமண சட்டங்கள் பற்றி அமெரிக்க தூதுவரிடம் இத்தகைய முஸ்லிம் குஷ்பு பெண்கள் முறையிட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. இதன் காரணமாகவே அமெரிக்க தூதுவர் அவ்வாறான கருத்தை பதிவிட்டுள்ளார்.
காதி நீதிவான் நியமனமும் இஸ்லாமிய திருமண சட்டத்தில் உள்ளதுதான் என்பதும் அதனை மாற்ற வேண்டும் அல்லது தனக்கு அதில் திருப்தியில்லை என சொல்வதும் ஒன்றுதான் என்பது சல்மாவுக்கு தெரியாதா என கேட்கிறோம்.
இப்தாருக்கு அழைக்கப்பட்ட பெண்கள் இப்தாரோடு நின்றிருக்க வேண்டும் அல்லது அமெரிக்க தூதுவரிடம் தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்ற வேண்டுமாயின் அதனை கேட்டுப்பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காட்டிக்கொடுத்தமை வரலாற்றுத்தவறாகும். அப்படித்தான் முஸ்லிம் திருமண சட்டம் பற்றி அமெரிக்க தூதுவர் கேட்டிருந்தால் அது பற்றி நீங்கள் உலமாக்களிடம் அல்லது உலமா சபையிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என சொல்லியிருக்க வேண்டும். அதனை விடுத்து இஸ்லாம் பற்றியோ நமது முன்னோர் இஸ்லாமிய திருமண சட்டத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பது பற்றியோ தெரியாத இத்தகைய பெண்கள் கருத்து சொல்ல வருவது அதுவும் அமெரிக்க தூதுவரிடம் சொல்வது கண்டிக்கத்தக்கதாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் உருவான காலம் தொட்டு ஒரு சிறு உரிமையை கூட முஸ்லிம்களுக்கு பெற்றுத்தர முடியாமல் உள்ள நிலையில் இருக்கும் உரிமைகளையும் இழக்கச்செய்ய அக்கட்சி சல்மா ஹம்ஸா மூலம் முயற்சி செய்கிறதா என கேட்கிறோம் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.