க.கிஷாந்தன்-
கொழும்பிலிருந்து பதுளைக்கு சென்ற இரவு தபால் சேவை புகையிரதம் 13.07.2017 அன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் 60 அடி பாலத்திற்கு அருகில் 110 கி.லோ மீற்றர் மைல் கட்டைபகுதிக்கு அண்மையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 13.07.2017 அன்று காலை முதல் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து இரவு 8.15 மணியளவில் புறப்பட்டு பதுளை நோக்கி சென்றுக் கொண்டிருந்த புகையிரதமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் நான்கு புகையிரத பெட்டிகள் குடைசாய்ந்து பாரிய அளவில் சேதத்திற்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தினால் கொட்டகலை அறுபது அடி பாலத்திற்கும், ரயில் தண்டவாளத்தில் ஒரு கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் பாரிய அளவில் தண்டவாளங்கள் சேதத்திற்குள்ளாகியுள்ளன. புகையிரத பெட்டியின் பாகங்கள் இரும்புடன் மோதி வீதியின் இரு புறங்களிலும் வீசி எறியப்பட்டுள்ளன.
இவ்விபத்து காரணமாக கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வரும் புகையிரதங்கள் அட்டன் வரையும் பதுளையிலிருந்து வரும் புகையிரதங்கள் கொட்டகலை வரையும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதில் வரும் பயணிகளை இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்கள் மூலம் பயணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
தற்போது துரித கதியில் பாதையை சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.




