எம்.வை.அமீர்-
இன்று நாட்டில் பேசுபொருளாயுள்ள மனித உரிமைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் 16/21 தீர்மானத்துடன் இணைக்கப்பட்டுள்ள 5 வது பந்திக்கு அமைவாக சமர்ப்பிக்கப்பட்ட தேசிய அறிக்கை போன்றன தொடர்பில் கல்முனை பிரதேச சமூக அமைப்புக்களுடன் கலந்துரையாடி அவர்களது கருத்துக்காயும் உள்வாங்கும் நோக்கில் இலங்கை வெளிநாட்டமைச்சின் அனுசரணையுடன் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் 2017.07.16ஆம் திகதி கல்முனை ஆசாத் பிளாஸா வரவேற்பு மண்டபத்தில் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
மாகாணசபை உறுப்பினரும், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரீப் சம்சுடீனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெளிநாட்டமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ் அவர்கள் கலந்துகொண்டு விளக்கவுரையாற்றினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் கால மீளாய்வு தொடர்பான குறித்த கலந்துரையாடல், எமது நாட்டில் மனித உரிமைகள் நிலையை மேம்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும், மனித உரிமை பிணக்குகள் தொடர்பான கருத்துக்களை முன்வைக்கின்ற ஒரு கலந்துரையாடல் செயற்திட்டமாகவும் இருந்தது.
இந்நிகழ்வில் வெளிநாட்டமைச்சிலிருந்து உதவிப் பணிப்பாளர் ராஜ்மி மானதுங்க மற்றும் நிகழ்ச்சித்திட்ட அலுவலர் நெத்மினி மேடவல ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் சிவில் உரிமைகள்,பொருளாதார கலாசார சமூக உரிமைகள் மற்றும் விசேட உரிமைகளின் கீழ் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் என்ற தலைப்புக்களில் மூன்று குழுக்காளப் பிரிந்து குறித்த விடயங்களில், பிராந்தியமும் சிறுபான்மையினரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி அவற்றுக்காக எதிர்பார்க்கப்படும் தீர்வுகளையும் முன்வைத்தனர்.