அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மத்திய அரசினால் நடைமுறையில் தரப்படுமானால் மாகாண சுகாதாரத்துறையை அபிவிருத்தியடையச் செய்ய முடியும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மத் நஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறை எதிர்நோக்கும் சவால்கள் குறித்துக் கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அதுபற்றி தொடர்ந்து விளக்கிய அவர்ளூ மேலும், முழு இலங்கையிலும் கிழக்கு மாகாணத்திலேயே அதிகமான ஆதார வைத்தியசாலைகள் உள்ளன. மாகாண நிருவாகத்தின் கீழ் 13 ஆதார வைத்தியசாலைகளும், மத்திய அரசின் நிருவாகத்தின் கீழ் நான்குமாக மொத்தம் 17 ஆதார வைத்தியசாலைகள் கிழக்கில் உள்ளன. இந்த விடயத்தை மத்தியரசும் கூட ஆச்சிரியமாக நோக்குகின்றது.
கிழக்கு மாகாணத்தில் வைத்தியர், தாதியர், ஊழியர்கள் போன்ற ஆளணிப் பிரச்சினைகளை கிழக்கு மாகாண சுகாதாரத்துறை எதிர்நோக்கி வருகின்றது.
அதேவேளை இவ்வாறான சவால்கள் முழு இலங்கையிலும் காணப்படுகின்றது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பில் உள்ளவாறு கிழக்கு மாகாணத்திற்கான முழுமையான அதிகாரம் மத்தியரசினால் நடைமுறையில் தரப்படுமானால் கிடைக்குமானால் இவ்வாறான பிரச்சினைகளை மாகாண மட்டத்திலேயே தீர்த்துக்கொள்ள முடியும்.
இந்த விடயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றார் அவரால் முடிந்தவரை மத்தியரசின் ஊடாக கிழக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கு உதவி வருகின்றார்.
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் வாழும் கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரத்திற்கேற்ப வளப்பங்கீடுகள் இடம்பெற்றேயாக வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி அவற்றினைத் தீர்த்து வைத்து வருகின்றோம்.
இதேவேளை நமது பிராந்தியங்களில் அனைவரினாலும் கேட்கப்படும் ஓர் கேள்வி 'எங்கள் வைத்தியசாலையையும் ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தித் தாருங்கள்' என்பதேயாகும்.
ஒரு வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையை தரமுயர்த்த வேண்டும் என்றால் அதற்கான சில நடைமுறை அம்சங்கள் உள்ளன. அவ்வாறான அம்சங்கள் சாத்தியம் இல்லை என்றால் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த முடியாது.' என்றார்.