எஸ். ஹமீத்-
கடந்த மூன்றாம் திகதி பம்பலப்பிட்டியில் பொலிஸ் காலாற்படை தலைமையகத்தில் வைத்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஊடகவியலாளர்களிடம் பேசும் போது பின்வருமாறு கூறுகிறார்:
''பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை மிக விரைவில் கைது செய்தே தீருவோம். அது தொடர்பில் யாரும் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவை இல்லை. இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு நான்கு விசேட பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம். குற்றமிழைத்த எவரையும் நாம் தப்பிக்க விடப் போவதில்லை. ஞானசாரரின் கைது உறுதியானது.''
மேலும் அவர் கூறுகையில்:
''சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தை யாராவது மீறுவார்களாயின் அந்த சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாம் பின் நிற்கப் போவதில்லை. அதன்படி ஞானசார தேரரைக் கைது செய்ய தற்போதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டம் வகுக்கப்பட்டு நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சில இடங்களில் பொலிஸார் இந்த விடயத்தில் பக்கச் சார்பாக நடந்து கொள்வதாக கூறுகின்றனர். உண்மையில் பொலிஸார் தமது நடவடிக்கைகளின் போது எந்தவொரு இன, மதம் சார்ந்து செயற்படுவதில்லை. யார் குற்றம் இழைத்தாலும் குற்றம் குற்றம் தான். அதனால் மிக விரைவில் அந்த கைது இடம்பெற்றே தீரும். எனவே இந்த விடயத்தில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையே இல்லை. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.'' என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்கிறார்.
பொலிஸ் மா அதிபரின் உறுதியான, தெளிவான இந்தப் பேச்சு இலங்கையில் சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயத்தை விரும்புகின்ற இலட்சக் கணக்கான மக்களின் மனதில் அன்று பாலை வார்த்தது. ஆனால், இன்று, அந்த மனங்களில் எரிநெருப்பை அள்ளிக் கொட்டிவிட்டது.
அது சரி...அந்த நான்கு பொலிஸ் குழுக்களுக்கும் நடந்தது என்ன...? இத்தனை நாட்களாய் அவை எங்கே இருந்தன...? என்ன செய்து கொண்டிருந்தன...? இப்போது எங்கே இருக்கின்றன...?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க சர்வதேச மட்டத்திலிருந்து குறைந்தது ஐந்து பொலிஸ் குழுக்களாவது இலங்கைக்கு மிக விரைவில் வருமென்று எதிர்பார்க்கப்படுவதாக நண்பர் ஒருவர் நம்மிடம் வேடிக்கையாகக் கூறினார். அந்த வேடிக்கைக்குள் புதைந்து கிடக்கும் நமது சமுகத்தின் வேதனைகளை, ஏமாற்றங்களை, விரக்தியை நம்மால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
நல்லாட்சியே...உனது நயவஞ்சக, நாற்ற, நபும்சகத்தனமான ஆட்சிக்கு ஒரு முடிவே கிடையாதா....?