திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு தன்னை கைது செய்ய முயல்வதாக குறிப்பிட்டு அதனை தடுக்குமாறு கோரி பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்ப்ட்ட அடிப்படை உரிமை மீறல் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான மூவர் கொன்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன் போதே தாக்கல்செய்த மனுவை வாபஸ் பெறுவதாக ஞானசார தேரர் உயர் நீதிமன்றுக்கு அறிவித்து அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து கோரிக்கையை ஏற்று அந்த மனுவை உயர் நீதிமன்றம் முடிவுறுத்தியது.
ஞானசார தேரரின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலலியத்தவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக குமார, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட நால்வரை பொறுப்புக் கூறத்தக்க தரப்பாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முறையான விசாரணை ஒன்றின்றி தன்னைக் கைது செய்ய திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு முயல்வதாகவும், அதனால் தன்னுடன் தொடர்புபட்ட விசாரணைகள் நிறைவுறும் வரை அல்லது சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் வரையில் தன்னை கைது செய்வதை தடுத்து இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இன, மதங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தும் விதமாக செயற்படுவதாக தெரிவித்து திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு (ஓ.சி.பி.டி) ஒழுங்கமைக்கப்பட்ட விசாரணை ஒன்று இன்றி தன்னை கைது செய்ய முயல்வதாகவும் இதனால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் ஞானசார தேரரின் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் முறையான விசாரணை ஒன்று நிறைவுறும் வரை தன்னை கைது செய்ய வேண்டாம் என தடை உத்தரவு பிறக்குமாறு கோரியுள்ள ஞானசார தேரர், தனக்கு விடுக்கப்ப்ட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ள நிலையில், அந்த விசாரணைகளும் இடம்பெற்று வருவதையும் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந் நிலையில் நேற்று குறித்த மனுவானது பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், உபாலி அபேரத்ன, விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன் போது மன்றில் ஆஜரானஞானசார தேரரின் சட்டத்தரணியான டிரந்த வலலியத்த, இந்த அடிப்படை மனு ஊடாக எதிர்ப்பார்த்த நிவாரணம் தற்போதும் தமக்கு கிடைத்துவிட்டதால் இந்த மனுவை முன்னெடுத்து செல்லும் நோக்கம் இல்லை எனவும் மனுவை வாபஸ் வாங்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார். இது தொடர்பில் ஆராய்ந்த நீதியரசர்கள் குழு அதற்கு அனுமதி அளித்து வழக்கை முடிவுறுத்தியது.
ஞானசார தேரர் நேற்று முன் தினம் கோட்டை நீதிமன்ரில் ஆஜராகி பிடியாணையை மீள பெற நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், பின்னர் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவில் ஆஜராகினார். இதன் போது கைது செய்யப்ப்ட்ட அவருக்கு பிணை வழங்க பொலிஸார் எதிர்ப்பு தெரிவிக்காததால் பிணை பெற்றுக்கொன்டு அவர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.