பொதுபலசேனாவின் ஞானசாரதேரர் மாத்திரமல்ல, அவரைப்போல் முஸ்லிம், தமிழ் அமைச்சர்களும் எம்பிக்களும் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களை பேசுகிறார்கள்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் நேற்று மதியம் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு
உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் தாக்குதல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் பொலிஸார் சிலரை கைது செய்துள்ளார்கள். என்றாலும் பொலிஸாரின் முன்னெடுப்புகள் போதாது. அவர்கள் துரிதமாக செயற்படவேண்டும்.
எமது நாட்டில் ஜனநாயகத்துக்கு சவால்விடும் சில குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தக் குழுக்கள் உலகில் தீவிரவாத குழுக்களுடன் சம்பந்தப்பட்டவைகளாகும்.
இவ்வாறான குழுக்களின் செயற்பாடுகள் தொடர்வதற்கு இடமளிக்க முடியாது. நாட்டின் சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் கடுமையாக அமுல் நடத்தப்படவேண்டும்.
முஸ்லிம்கள் தமது கடைகள், பள்ளிவாசல்களுக்கு எதிராக 25 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார்கள். இந்துக்கள் கிழக்கில் 61 கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். கிறிஸ்தவர்கள் தங்கள் ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். பௌத்தர்கள் தங்கள் தொல்பொருள் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் முறையிடுகிறார்கள்.
இச்சம்பவங்களின் பின்னணியுடன் சம்பந்தப்பட்டவர்கள் இருக்க வேண்டும். பொலிஸார் இந்த சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களை தராதரம் பாராது கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இலங்கையில் மாத்திரமல்ல உலகெங்கும் இவ்வாறான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. ஜேர்மனியில் 97 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. இதேபோன்று இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்காவில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக்கில் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கில் கொலை செய்யப்படுகிறார்கள். ஷியா – சுன்னி கலவரத்தில் அநேகர் இறக்கிறார்கள்.
vivelli