கடந்த சில நாட்களாக பௌத்த தேரர்களை அவமானப்படுத்தும் வகையில் சில சமூக இணையத்தளங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. இவ்வாறு சமூக இணையத்தளங்கள் ஊடாக வணக்கத்துக்குரிய தேரர்களை அவமானப்படுத்துவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஆழ்ந்த கவலை தெரிவிப்பதுடன், அதனை தற்போதைய சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சீரழிவாகவாக கருதுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சமூக முற்னேற்றத்துக்காகவே நவீன தொழில்நுட்பங்கள் பாவிக்கப்பட வேண்டுமே தவிர சமூகத்தக்கு பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ, நாட்டில் அமைதியின்மை ஏற்படக்கூடியவாறோ அவற்றை பயன்படுத்தக்கூடாதெனவும் குறிப்பிட்டார்
இன்று (25) பிற்பகல் களுத்துறை விகாரை வளாகத்தில் நடைபெற்ற இலங்கை அமரபுர பிரிவின் சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்துடன் நாளுக்குநாள் சீர்குலைந்து வரும் சமூகத்தை பௌத்த கோட்பாடுகளே அமைதிப்படுத்தும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, பெரும்பாலான சமூக பிரச்சினைகளுக்கு பௌத்த கோட்பாட்டில் தீர்வுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அனைத்து இனங்களுக்குமிடையே சமாதானம் மற்றும் சகோதரத்துவத்துடன் வாழும் அமைதியான, சமாதானமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக மதகுருமார்கள் முன்னின்று செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.