திருகோணமலை கருமலையூற்று எனும் இடத்தில் அமைந்துள்ள முஸ்லிம்களின் பாரம்பரிய வணக்கஸ்தலத்தை படையினர் அபகரிப்பதைக் வண்மையாகக் கண்டிப்பதோடு இந்த நடவடிக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக தான் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நன்கொடை உறுதிகளை கைமீட்டல், குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல், குற்றவியல் சட்டக்கோவை தொடர்பிலான விவாதத்தில் பிரஸ்தாபித்ததாகவும் அவர் கூறினார்.
படையினரால் கையப்படுத்தப்பட்டுள்ள திருகோணமலை கருமலையூற்று எனுமிடத்திலுள்ள முஸ்லிம்களின் பாரம்பரிய வணக்கஸ்தலமாகக் காணப்பட்ட கரிமலையூற்றுப் பள்ளிவாசல் வியடமாக மேலும் தெரிவித்த அவர்,
இப்பள்ளிவாசல் முற்றாக உடைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ள நிலையில், அது அமைந்துள்ள இடத்தையும் படையினரின் பாவனைக்காக சுவீகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கரிமலையூற்றுப் பள்ளிவாசல் 2015 ஆம் ஆண்டு முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பள்ளிவாசல் இடிக்கப்பட்ட விடயம் கேள்விப்பட்டு அப்போது கிழக்கு மாகாண முதலமைச்சராகவிருந்த நஜீப் அப்துல் மஜீட், மற்றும் படைத்தரப்பின் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று அதனை பார்வையிட்டனர்.
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட விவகாரம் அப்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை மீளக் கட்டித் தருவதாக படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டது.
இது இவ்வாறிருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்னர், பெப்ரவரி 15ஆம் திகதியிடப்பட்டு, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரசேத செயலாளரால் வர்த்தமானி அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அதில், படையினருக்கு முகாம் அமைப்பதற்காக களப்பின் பேக் குடா (Kloppenburg) பிரதேசத்தில் உள்ள 4.65 ஹெக்டெயர் நிலப்பரப்பை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கரிமலையூற்று, நாச்சிக்குடா பிரிவில் உள்ள குறித்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான எந்த விவரங்களும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் இல்லை.
முஸ்லிம்களின் பாரம்பரியமான கரிமலையூற்று பள்ளிவாசல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு படையினருக்கு நிலச் சுவீகரிப்பு செய்வது என்பது, முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக அமையும்.
இதனை மிக மோசமான நடவடிக்கையாக நாங்கள் காண்கின்றோம். எனவே, இதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், மிக இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த விடயத்திலிருந்து பின்வாங்கி மக்களது காணிகளை மக்களுக்கு வழங்குவது சிறப்பான செயற்பாடாக இருக்கும் என்று நாங்கள் எதிர்ப்பார்கின்றோம்' என்றாரவர்.