நிலையியற் கட்டளை 23/2ன் கீழ் கேட்கப்படும் வினா
டொரிங்டன் - கல்மதுரை பிரிவு தோட்டம் தொடர்பான கேள்விக்கான பதில்
அக்கரபத்தனை பிரதேசத்தில் டொரிங்டன் தோட்ட கல்மதுரை பிரிவில் வசிக்கும் லயன் குடியிருப்பாளர்களின் பிரச்சினை தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டுவந்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களே..
கல்மதுரை தோட்டத்தில் 2015ம் ஆண்டு பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் பாதிக்கப்பட்டனர்;. அப்போது எனது பணிப்பின் பேரில் அமைச்சின் அதிகாரிகள் அங்கு சென்று நேரடி ஆய்வு நடத்தி எனக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் 2016ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க வரவு செலவுத் திட்டத்தில் எனது அமைச்சுக்கு வீடமைப்புத் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒவ்வொன்றும் தலா ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய 10 வீடுகள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அதுதவிர கல்மதுரை தோட்டத்தில் மாத்திரமல்ல மலையக மக்கள் வாழும் பல தோட்டங்களிலும் சுமார் 200 வருடங்கள் பழைமையான லயன் குடியிருப்புக்களே காணப்படுகின்றன. அவை வாழ்க்கை நடத்துவதற்கு உகந்ததல்ல.
மழைக் காலங்களில் இம்மமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவேதான் இந்த மக்களை லயன் வாழ்க்கை முறையில் இருந்து மீட்டு தனி வீடுகளில் குடியமர்த்தவென எனது அமைச்சு முறையான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. எனவே விரைவில் இம்மக்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்த்து வைக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.