எம்.வை.அமீர் -
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது சேவைகளை இன்னும் மேன்படுத்தும் பொருட்டு அங்கு பணியாற்றும் பல்வேறு தரப்பினருக்கும் பல்கலைக்கழக ஊழியர் மேன்பாட்டுப் பேரவையின் ஊடாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் துறைசார்ந்த பல்வேறு பயிற்சிகளை வழங்கிவருகின்றது.
குறித்த திட்டத்தின்கீழ் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களுக்கும் பயிற்சிகளை வழங்கிவருகிறது. அதன் ஒருகட்டமாக கல்விசாரா ஊழியர்களுக்கான “அவசியமான மென்திறன் விருத்தி” எனும் தலைப்பில் இதுவரை பல்வேறு பிரதேசங்களில் 5 குழுவினருக்கு வதிவிடப்பயிற்சிப் பட்டறைகளை நடாத்தியிருந்தது.
கடந்த 2017-03-04 முதல் 3 நாட்களை உள்ளடக்கிய வதிவிடப்பயிற்சிப் பட்டறை ஒன்றை 6 வது குழுவினருக்கு அநுராதபுரம், தலாவ தேசிய சமூக அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடாத்தியது.
ஊழியர் மேன்பாட்டுப் பேரவையின் தலைவர் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெஸீலின் முழுநேர பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற வதிவிடப்பயிற்சிப் பட்டறையில் சுமார் 40 பயிற்சியாளர்கள் பங்குகொண்டிருந்தனர்.
குறித்த பயிற்சிபட்டறையில் உடற்பயிற்சி மற்றும் போசாக்கு விளக்கம் என்ற தலைப்பில் விரிவுரைகளையும் உடற்பயிற்சிகளையும் ஐ.எம்.கதாபியும் சாதகமான சிந்தனை (Positive Thinking), குழுமுயற்சியில் நம்பிக்கையும், விளைவுசார்ந்த குழுவேலையும், தன்னம்பிக்கை (Self Confident), கடின உழைப்பு, போன்ற தலைப்புக்களில் அநுராதபுரம், தலாவ தேசிய சமூக அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் பணிப்பாளரும் பயிற்றுவிப்பாளருமான வை.எம்.நிம்ஷாத்தும், நேர முகாமைத்துவம், நேர்மறை மனப்பாங்கும் நடத்தையும் எனும் தலைப்புக்களில் ஊழியர் மேன்பாட்டுப் பேரவையின் தலைவர் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெஸீலும், உங்கள் பலத்தை நம்புதலும் முன்னோக்கி நகர்தலும், கவனித்தல், அவதானித்தல்,தொடர்பாடல் திறன், ஒத்துப்போதல்,பிரச்சினைகளை தீர்த்தலும், படைப்பாற்றலும், உங்கள் இலக்கும் என்ற தலைப்புக்களில் பயிற்சி ஆலோசகர் ஸுஹைர் எம்.ஏ.காதர் விரிவுரைகளையும் குழுச்செயற்பாட்டுப் பயிற்சிகளையும் வழங்கினார்.
பயிற்சிப் பட்டறையின் அவதானிப்பாளர்களாக தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் வை.முபாறக் மற்றும் எம்.எம்.முகம்மட் காமில்,எம்.எம்.நௌபர் ஆகியோரும் ஊழியர் மேன்பாட்டுப் பேரவையின் சார்பில் எம்.என்.முஸ்னியும் பங்குகொண்டிருந்தனர். வதிவிடப்பயிற்சிப் பட்டறையின்போது அநுராதபுரம் சிகிரியா போன்ற புரதான இடங்களுக்கும் பயிற்சியாளர்கள் அழைத்துச்செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.






