அதன்பிறகு பல மாற்றங்கள் அரசியலில் நடந்து முடிந்தாலும், மு.காங்கிரஸின் தலைவரினால் 2000ம் ஆண்டு வைக்கப்பட்ட சந்திரிக்காவின் தீர்வு திட்டத்தில் வடகிழக்கு சம்பந்தமாக தெளிவாக கூறப்பட்டிருந்தது என்னவென்றால், வடக்கோடு கிழக்கு இணைக்கப்படுவதாக இருந்தால் கிழக்கு மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அந்தமக்களின் அபிப்பிராயம் கேட்கபடவேண்டும் என்று கூறப்பட்ட விடயமாகும்.
அந்த தீர்வு திட்டத்தை தயாரிப்பதில் முக்கிய பங்காற்றியவரே மர்ஹும் அஸ்ரப் அவர்கள்தான், அதனால் அவருடைய கருத்தாகவே அதனை எடுத்துக்கொள்ளலாம்.
அப்படி என்றால் பெரும்பாண்மை முஸ்லிம்களின் ஆதரவை பெற்ற மர்ஹும் அஸ்ரப் அவர்களே கிழக்கை வடக்கோடு இணைப்பது என்றால் கிழக்கு மக்களிடம் கேட்கவேண்டும் என்று கூறியது மட்டுமல்ல, அதில் தலையிட நான் தயாரில்லை என்ற விடயத்தையும் தெளிவாக்கி சென்றுள்ளார்.
அப்படியிருக்கும் போது இப்போதுள்ள மு.காங்கிரஸினதும், அதன் தலைமைத்துவமும் கிழக்கு மக்களின் அபிப்பிராயத்தை புறந்தள்ளிவிட்டு,
அவர்களாகவே தீர்வுகளை முன்வைத்து தமிழ் தலைவர்களுடன் பேசுவதற்கு யார் அவர்களுக்கு அனுமதி அளித்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இணைந்த வடகிழக்கில் அதை தாருங்கள் இதை தாருங்கள் என்று கேட்கின்றார்களே இதற்கு அனுமதி கொடுத்தது யார்?
கிழக்கை வடக்கோடு இணைப்பது என்றால் கரையோர மாவட்டத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று கல்முனை அமைச்சர் தமிழ் தலைவர்களை பார்த்து கூறுகின்றாரே அப்படி கேட்பதற்கு அவருக்கு அனுமதி கொடுத்தது யார்?என்ற கேள்விக்கு அவர்களினால் பதில் கூறமுடியுமா?
மு.காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அவர்களின் பொறுப்பு உணர்ந்து கிழக்கு மக்களிடம் இதனைப்பற்றி கலந்தாலோசனையாவது செய்தார்களா என்றால், அப்படி ஒன்று நடந்ததாக நாங்கள் அறியவில்லை.
கிழக்கு மக்களின் அனுமதியில்லாமல், அவர்கள் இப்படி தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ளும் விடயம் எக்காரணம் கொண்டும் கிழக்குவாழ் மக்களினால் அனுமதிக்கப்படமாட்டாது, என்பதை கூடிய சீக்கிரம் அறிந்து கொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையெனலாம்.
மஹிந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு எப்படி ஒன்றுபட்டார்களோ அதே போன்று இந்தவிடயத்திலும் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டார்களேயானால் இதுவே அவர்களின் அழிவுக்கும் காரணமாகிவிடலாம்.
கடந்த காலங்களில் வடகிழக்கு பிரச்சினையில் எந்தக்கருத்தும் சொல்லாமலிருந்த ஹக்கீம் அவர்கள் தற்போது அது சம்பந்தமாக தமிழ் தரப்போடு பேசிவருகின்றோம் என்று ஒப்புக்கொண்டது மட்டுமல்ல வடக்கு கிழக்கு இணைப்புக்கு நாங்கள் தடையாக இல்லை என்றும் கூறிவருகின்றார்,
அதே நேரம் அமைச்சர் ஹரீஸ் அவர்களும் அதற்கு கட்டியம் கூறுவது போன்று, நாங்கள் தமிழ் தரப்போடு பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம் என்றும் ஒரு ரீவி நிகழ்ச்சியில் கூறினார்.
ஆகவே இந்த விடயத்தில் மு.காங்கிரஸ் ஆழம் அறியாமல் காலைவிடுகின்றதா?
அல்லது ஆழம் தெறிந்துதான் காலை விடுகின்றதா?
என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது.
கடந்த காலங்களில் பல விடயங்களில் பணத்துக்கும், பதவிகளுக்கும் ஆசைப்பட்டு பல முக்கிய விடயங்களில் உறிமைகளை விட்டுக்கொடுத்து மூக்குடைபட்ட விடயங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில் கட்சியின் தலைவரை கட்டுப்படுத்தகூடிய செயலாளர் பதவியின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது எனலாம். அதன் அதிகாரங்களை பறித்துவிட்டு, முழு அதிகாரத்தையும் தலைவர் தன் கையில் எடுத்துள்ளதனால், அவரை கட்டுப்படுத்துவதற்கு இருந்த ஒரே வழியும் அடைக்கப்பட்டுள்ளது என்பதே அச்சப்படக்கூடிய உண்மையாகும்.
இந்த நேரத்தில் மு.காங்கிரஸ் தலைவர் தான் நினைத்தததை செய்வதற்கு எந்த தடையும் இல்லாத தனித்தண்மை வாய்ந்த தலைவராக இருந்து கொண்டு என்ன செய்யப்போகின்றாறோ என்று வேடிக்கைதான் பார்க்கவேண்டியுள்ளது.
இந்த விடயங்களின் பாரதூரம் அறிந்து முஸ்லிம் மக்கள் இந்த விடயத்தில் கரிசனை காட்டத்தவரினார்கள் என்றால், நமது எதிர்கால சந்ததியினரை நடுக்கடலில் தள்ளிவிடுவதற்கு நாம் உடந்தையாக இருந்த பாவத்துக்கு ஆளாகவேண்டிவரலாம்...இதுதான் உண்மை.
எம்.எச்.எம்.இப்ராஹிம்
கல்முனை...