பழுலுல்லாஹ் பர்ஹான்-
இலங்கையில் இயங்கிவரும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று 23 வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலைகளில் வெளி நோயாளர் பிரிவு,கிளினிக் பிரிவு போன்ற பிரிவுகளுக்கு வருகை தரும் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களையும்,கஷ்டங்களையும் எதிர்நோக்கி வருகின்றர்.
இதேவேளை இப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்தில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரம்ப மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை தவிர ஏனைய பிரிவுகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இந் நிலையில் தூர இடங்களில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வெளி நோயாளர் மற்றும் கிளினிக் பிரிவுகளில் சிகிச்சை பெறுவதற்காக வருகைதந்த நோயாளர்கள் சிகிச்சைக்காக காத்திருந்து பின்னர் திரும்பிச் சென்றனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அறிவித்தல் பலகையில் அறவித்தல் என்று குறிப்பிட்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அடையாள வேலை நிறுத்தம் இன்று காலை 8.மணி முதல் நாளை காலை 8.மணி வரை தொடரும். இதனால் வெளிநோயாளர்; பிரிவு மற்றும் கிளினிக் என்பன நடைபெறமாட்டாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



