அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-
அம்பாறை மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலாமிடத்தைப் பெற்ற கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் ஏ. முஹம்மட் சஸ்னி மற்றும் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றுள்ள ஏனைய குறித்த பாடசாலை மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மெஸ்ரோ அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (19) வியாழக்கிழமை கல்லூரி எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் மெஸ்ரோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த சாதனை மாணவன் ஏ. முஹம்மட் சஸ்னியை பொன்னாடை போர்த்தி மடிகணினி வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் மெஸ்ரோ அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நசீல், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஏ. அப்துல் பசீர், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, மெஸ்ரோ அமைப்பின் பொருளாளர் எம். முஸ்தகீன், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எம். கமால், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஸாஹிரா கல்லூரி பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், உயர்தர பிரிவு பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றுள்ள ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.