பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இன்று (17) சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த கையேஸ் வாகனமும் யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தும் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.
சுற்றுலா வாகனத்தில் பயணித்த, 3 பெண்களும் 7 ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், அதில் பயணித்த ஏனைய மூன்றுபேர், படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர், யாழ். போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். கையேஸ் வாகனத்தில் பயணித்தோர் தென்னிலங்கையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவார். இறந்தவர்களின் சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.






