ஆவா குழு உறுப்பினர்கள் என சமீபத்தில் கைது செய்யப்பட்டு, தற்சமயம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் விவகாரம், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழிருந்து அகற்றப்பட்டு சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் வியாழக்கிழமை இரவு தன் டுவீடர் தளத்தில் தெரிவித்திருந்தார்.
இது பற்றி இன்று அமைச்சர் கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்த, கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்கள்,என்னை எனது அமைச்சு அலுவலகத்தில் நேற்று காலை சந்தித்து, இவ்விவகாரத்தை என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினேன். பயங்கரவாத தடை சட்ட பிரயோகம் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதுவே எனது நிலைப்பாடாக இருந்தது. இதையடுத்து இந்த விவகாரம் விரிவாக ஆராயப்பட்ட நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான இளைஞர்களின் விவகாரத்தை, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழிருந்து அகற்றி, சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டுவரும்படி, கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரட்னாயக்கவுக்கு பணிப்புரை விடுத்தார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வயதில் குறைவான இந்த இளம் பிராயத்தினரின் எதிர்காலம் குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. எனவே பயங்கரவாத தடை சட்டத்தின் கீழிருந்து இவர்களின் விவகாரம் அகற்றப்பட்டு, சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு, கைதான இளைஞர்களின் வயதும் ஒரு பிரதான காரணமாக அமைந்துள்ளது. விசாரணையின் முடிவில் இந்த இளைஞர்கள், நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் பட்சத்தில் அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை, பயங்கரவாத சட்ட பாய்ச்சல் இல்லாத காரணத்தால், ஒப்பீட்டளவில் பாரதூரமானதாக இருக்காது. எனினும் ஆவா அல்லது எந்த ஒரு சட்டம் ஒழுங்கு முறைக்கேட்டைடையும் நமது அரசு இனிமேல் சகித்துக்கொள்ள போவதில்லை என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
