பைஷல் இஸ்மாயில்-
ஒரே தடவையில் எல்லாத்தேவைகளையும் நிறைவு செய்வதென்பது மிகக் கடினமான விடயமாகும் என்று கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸிர் கூறினார்.
ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலையில் 90 இலட்சம் ரூபாய் செலவில் பெண் நோயாளர்கள் தங்கும் விடுதி நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்தில் 62 ஆயிர்வேத வைத்தியசாலைகள் உள்ளன. இந்த வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும், தேவைப்பாடுகளையும் நான் நிவர்த்தி செய்யவேண்டிய தேவை எனக்குள்ளது. இதேபோல் மாகாணத்தில் 120 சுகாதார வைத்தியசாலைகளும், 45 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இரிக்கின்றது. இதையும் நான் பார்க்கவேண்டியுள்ளது. அதற்கமைவாக கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் தேவைப்பாடுகளையும் நான் ஒரே தடவையில் நிவர்த்தி செய்வது என்பது மிகக் கடினமான விடயமாகும்.
இதனை நான் கருத்திற் கொண்டுதான் இந்த அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றேன். இந்த ஆயுர்வேத வைத்தியசாலைக்கு மிக நீண்டநாள் தேவையாக இருந்த வந்த பெண்கள் நோயாளர்கள் தங்கும் விடுதி நிர்மாணிப்பதற்காக 90 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.