அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலித்தீன்-
கல்முனை மாநகர சபை கலைக்கப்பட்ட பின்னர் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை மாநகர முதல்வர் செயலகத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
கல்முனை மாநக சபையின் ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி மற்றும் கல்முனை மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப் உள்ளிடட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாநகர சபையின் அன்றாட செயற்பாடுகள், எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிடட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக திண்மக்கழிவகற்றல் விடயத்தில் எதிர்நோக்கப்படுகின்ற பாரிய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தன்னால் முடியுமான அதிகபட்ச உதவிகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் பெற்றுத் தருவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் உறுதியளித்தார்.