ஏ.எம்.றிகாஸ்-
இலங்கையிலுள்ள சுமார் இரண்டுகோடி பத்து இலட்சம் பேரில் இருபத்தாறு இலட்சம்பேர் விஷேட தேவையுடையவர்களாக இருப்பதாக சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் என். மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இவர்களில் 57.7 வீதமானவர்கள் ஆண்கள் மற்றும் 42.3 வீதமானவர்கள் பெண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச ரீதியில் நோக்குமிடத்து உலக மொத்த சனத்தொகையில் 15 வீதமானவர்கள் விஷேட தேவையுடையவர்களென புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. விஷேட தேவையுடையவர்கள்; குறித்து ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் அமைப்புக்களின் அதிகாரிகளுக்கு தெளிவுட்டுவது தொடர்பில் மட்டக்களப்பு-சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் இரண்டு நாள் விஷேட மாநாடு ஜுலை 30-31 ஆந்திகதிகளில் நடைபெற்றது. சமூக வியாபார மற்றும் தொழில் நுட்ப அபிவிருத்தியாளர்கள் அமைப்பு ஏற்பாடு செய்த இச்செயலமர்வின் ஓர் அம்சமாக களப்பயணம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.
2012 ஆண்டில் எமது நாட்டில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் பதினேழு இலட்சம் பேர் விஷேட தேவையுடையவர்களாக இருந்தனர். எனினும் பல்வேறு காரணங்களினால் இத்தொகை தற்போது அதிகரித்துள்ளது. வீதி விபத்துக்கள், தொற்றா நோய்கள், விதவையாதல் மற்றும் வயோதிபம் போன்ற காரணிகள் விஷேட தேவையுடையவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.கண், காது, வாய், கை,கால் மற்றும் மூளை உள்ளிட்ட உறுப்புக்களின் செயற்பாடுகளின் குறைபாடு;; விஷேட தேவையுடையவர்களாக மாறுவதற்கு காரணியாக அமைகிறது. எமது நாட்டில் விஷேட தேவையுடையவர்களில் 25.12 வீதமானவர்கள் உள ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாகும். இதேவேளை,கிழக்கு மாகாணத்தில் 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 35ஆயிரத்து 541 பேர் விஷேட தேவையுடையவர்களதக உள்ளனர்.