எம்.வை.அமீர் -
வெல்லம்பிட்டி அனர்த்தத்தை வெறுமனே இயற்கை அனர்த்தம் என்ற வரையறைக்குள் மட்டும் வைத்து ஆராயமுடியாத நிலையில் தங்கள் இருப்பதாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் மற்றும் அரசியலமைப்பு சபைக்கு உலமா கட்சி முன்வைத்துள்ள முன்மொழிவுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒன்று 2016-05-22 ஆம் திகதி உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவர்களின் கல்முனை இல்லத்தில் இடம்பெற்றது.
தொடர்ந்து கருத்துத்தெரிவித்த முபாறக் அப்துல் மஜீத்,
வெல்லம்பிட்டியில் பாரிய வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் வகையில் களனி கங்கையின் வான் கதவுகளை இரவோடிரவாக திறந்து விட்டதில் சதி ஏதும் இருக்கிறதா என்பதை அரசாங்கம் உடனடியாக ஆராய்ந்து மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்
நாட்டில் அடிக்கடி மழை வருவதும் அனர்த்தங்கள் ஏற்படுவதும் இயற்கையானதுதான். கடந்த காலங்களிலும் வெள்ளம் காரணமாக வெல்லம்பிட்டியில் இரண்டு அல்லது மூன்று அடிக்கு நீர் வருவதுண்டு. அதுவும் வாரக்கணக்கில் தொடர்ச்சியாக மழை பெய்தாலேயே இவ்வாறு நடப்பதுண்டு. ஆனால் அண்மைய வெள்ளம் என்பது இரண்டு நாட்கள் பெய்த மழைக்கு களனி கங்கையின் வான்கதவுகள் திடீரென்று இரவில் திறக்கப்பட்டு எட்டு அடிக்கு மேல் தண்ணீர் பரவியுள்ளமை வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட செய்றகை அனர்த்தமா? என்ற கேள்வி எழுகிறது.
அதுவும் வான் கதவுகள் திறக்கப்படும் அவதானமாக இருக்கவும் என்ற சிறிய அறிவித்தல் மட்டுமே அம்மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. களனியின் நீர்ப்பரம்பல் எவ்வளவு, வான் கதவுகள் திறக்கப்படும் போது அது எந்தளவு தாக்கும் என்பதெல்லாம் தெரியாத படிப்பறிவற்றவர்கள் நீரேந்து பகுதிகளில் பணி புரிகிறார்களா என்று கேட்க வேண்டியுள்ளது. அப்படி அறிவு இருக்குமாயின் ஏன் முன் கூட்டியே மக்களை வெளியேற்றவில்லை என கேட்கிறோம்.
அண்மைக்காலமாக சில இனவாதிகள் வெல்லம்பிட்டி பற்றி இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளர்கள். அங்கு சேக்குகள் சுல்தான்கள் நிலம் வாங்குவதாகவும் பொய்யாக சொல்லியுள்ளனர். இவர்களின் பேச்சைக்கேட்டு வெல்லம்பிட்டி மக்களை ஒரேயடியாக எழுப்பி அந்த இடங்களை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சியின் ஒரு கட்டமாக இவை நடந்துள்ளதா என்பதை ஆராய வேண்டிய பொறுப்பு அரசுக்குள்ளது என்பதை உலமா கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. அத்தோடு இதன் உண்மைத்தன்மை பற்றி முஸ்லிம் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆராய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தளவு நாம் நிவாரணம் வழங்கிக்கொண்டிருக்கும் இந்நிலையில் இந்த அனர்த்தத்தின் பின்னணியில் இனவாத கரங்கள் உள்ளனவா என்பதை ஆராய்வதும் அம்மக்களுக்கும் எதிர் காலத்தில் இவ்வாறு நடக்காமல் இருப்பதற்கும் நாம் செய்யும் மிகப்பெரிய உதவியாகும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.