இயந்திரங்களைப் பயன்படுத்தி இறைச்சிக்கான மாடுகளை அறுக்கக் கோரி இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படும் போது அவற்றுக்கு வேதனை குறைந்த வழிமுறையைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பசுக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் சட்டம் இருந்தபோதிலும் அதனைக் கடுமையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளிநாடுகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தி இறைச்சிக்கான மாடுகள் கொல்லப்படுவதால் அவை அறுக்கப்படும் உயிர்களுக்கு வேதனை குறைவாக இருக்கிறது, எனினும், இலங்கையில் அவ்வாறான நடைமுறை இல்லை எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, வெளிநாடுகளிலுள்ள நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
அவ்வாறு வேதனை குறைந்த வகையில் கொல்வதற்கான இயந்திரங்கள் தேவையெனில் அவற்றை சீனாவில் இருந்து பெற்றுத் தர தயாராக இருப்பதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சுவர்ணா போபிட்டிய நிதியத்தின் தலைவி சுவர்ணா போபிட்டிய இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
பௌத்த கலாசார அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இறைச்சிக்கான மாடுகள் கொல்லப்படுவதை முற்றாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
