பிரதி அமைச்சர் ஹரீஸின் கோரிக்கைக்கு பலன் கிட்டியது..!

ஹாசிப் யாஸீன்-
பொத்துவில் பிரதேச கெடோயா நீர்ப்பாசனத்திட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். முறையானநீர்ப்பாசனத்திட்டம் இன்மையால் அங்குள்ள விவசாயிகளின் பல்லாயிரக்கணக்கான காணிகள் செய்கை பண்ணப்படாமல் காணப்படுகின்றது. இதனை அரசாங்கம் கவனத்தில் எடுத்து இத்திட்டத்தினை நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

நீர்ப்பாசனம், சுற்றாடல், மகாவலி அபிவிருத்தி அமைச்சுகளுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் நேற்று (07) திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இவ்விவாதத்தில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பொத்துவில் கெடோயா நீர்ப்பாசனத்திட்டத்தினை கடந்த கால அரசும் அமைச்சர்களும் நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதிகள் வழங்கியிருந்தும் அது நிறைவேற்றப்படவில்லை. இதனால் இங்குள்ள விவசாயிகள் பலகஷ்டங்களை அனுபவித்து வருவதுடன் தனது வாழ்வாதார தொழிலையும் இழந்துள்ளனர்.

இன்று நல்லதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இத்திட்டத்திற்கு நீரைக்கொண்டு வரக்கூடிய மொனராகலைமாவட்டத்தை சேர்ந்தவர் நீர்ப்பாசன அமைச்சராக விஜயமுனி சொய்ஸா இருப்பதால் இம்மாவட்டத்திலிருந்து நீரைக்கொண்டு வந்து இத்திட்டத்தினை நிறைவேற்றுவது இலகுவானதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

இத்திட்டத்தினை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் நன்மையடைவுள்ளனர். இதனால் பொத்துவில் மக்களின் வாழ்வாதாரமும்  நாட்டின் பொருளாதாரமும் உயர்வடையும்.

அமைச்சர் விஜயமுனி சொய்ஸா ஊவா முதலமைச்சராகவிருந்த காலப்பகுதியில் அப்பகுதி சிறுபான்மைமக்களுக்கு பல வகைகளில் சேவையாற்றியர். எனவே எனது மாவட்ட பொத்துவில் மக்களின் இப்பிரச்சினையை அமைச்சர் கவனத்தில் எடுத்து நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் மட்டுமல்ல பொத்துவில் பிரதேசத்திலுள்ள மக்களின் குடிநீர்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடியதாக அமையும். இதனால் அப்பிரதேசத்திலுள்ள லட்சக்கணக்கான மக்கள் நன்மையடைவார்கள்.

அதே நேரம் சுற்றாடல் அமைச்சின் கீழ் பொத்துவில் பிரதேசத்தில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக கரங்கோ, பாலையடி வட்டை, ஏகாம்பற்று பள்ளியடி வட்டை, வட்டமடு போன்ற பிரதேசத்தில் கடந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது.

இன்று வன பரிபாலனை திணைக்களமும் வன விலங்குகள் திணைக்களமும் இக்காணிகளுக்குள் விவசாயம் செய்வதை தடை செய்துள்ளதனால் அம்மக்கள் தங்களது ஜீவனோபாய தொழிலான விவசாயத்தை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.

சுற்றாடல் அமைச்சுக்கு பொறுப்பான ஜனாதிபதியும் அதற்கான பிரதி அமைச்சர்களும் பொத்துவில் மக்களின் இந்நிலைமையை கருத்தில் கொண்டு இக்காணிகளுக்குள் விவசாயம் செய்யக்கூடிய உரிமத்தை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் கல்முனை கரைவாகு நீர்ப்பாசனத்திட்டம் கடந்த காலத்தில் உலக வங்கியின் நிதி உதவியுடன் செய்யப்பட்டு வந்தது. தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிதிகளை அமைச்சர் ஒதுக்கீடு செய்துதர வேண்டும். இதனால் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட கரைவாகு வட்டைகாணிகள் இரண்டு போகம் விவசாயம் செய்யக்கூடியவாறு அமையும் எனவும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நீர்ப்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்ஸா, பிரதி அமைச்சர் ஹரீஸ் சுட்டிக்காட்டிய பொத்துவில் கெடோயா நீர்ப்பாசனத் திட்டத்தினையும், கல்முனை கரைவாகு நீர்ப்பாசனத் திட்டத்தினையும் நிறைவேற்றித்தர உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -