ஜெம்சாத் இக்பால்-
உத்தேச தேர்தல் சீர்திருத்தம் சரியான முறையில் அமையாவிட்டால் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக செயல்பட நேரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அத்துடன் தற்பொழுது நடைமுறையிலுள்ள தேர்தல் முறை முழு நாட்டையும் ஒன்றாக கவனத்தில் கொள்வதால் சிறுபான்மையினருக்கு பெரிதும் நன்மை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நோர்வேயைச் சேர்ந்த அரசியலமைப்பு மற்றும் உலக தேர்தல் சீர்திருத்த நிபுணர் ஹேரே வேலண் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்றத்தில் சந்தித்து உத்தேச தேர்தல் சீர்த்திருத்தம் சம்பந்தமாக கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
நிபுணர் ஹேரே வேலண் ஸ்கொட்லாந்து, ஜேர்மனி மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றின் தேர்தல் முறையைமை பற்றி சுருக்கமாக விளக்கினார்.
இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன், பிரதியமைச்சர்களான பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன, அலி சாஹிர் மௌலானா, எம்.ஐ.எம்.மன்சூர், திலகராஜ், டாக்டர் A.R.A. ஹபீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் வாபா பாறூக் மற்றும் அரசியல் நிபுணர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.