தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோரை எதிர்வரும் இரண்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் இந்தச் சந்தேக நபர்கள் இருவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த மாதம் 7ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, 04.11.2015 அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இருவரும் மஜிஸ்திரேட் முன்னிலையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
