காஷ்மீர் மாநிலத்தில் மாட்டு இறைச்சிக்கும், பசுவதைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ஜம்மு கோர்ட்டும், ஸ்ரீநகர் கோர்ட்டும் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கியது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கு விடப்பட்டுள்ளது. வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு மாநில அரசின் உத்தரவுக்கு 2 மாதத்துக்கு தடை விதித்து உள்ளது. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த விவகாரத்தால் கடந்த சில நாட்களாக காஷ்மீர் சட்டசபையில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுயேச்சை எம்.எல்.ஏ. ஷேக் அப்துல் ரஷீத் நேற்று எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் மாட்டிறைச்சி விருந்து கொடுத்தார். இதில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்தது. இன்று காஷ்மீர் சட்டசபை கூடியதும் சுயேச்சை எம்.எல்.ஏ.வின் செயலுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் தெரிவித்து பேசினர். காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது திடீர் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், சுயேச்சை எம்.எல்.ஏ. ரஷீத்தின் இருக்கையை நோக்கிச் சென்று அவரை சுற்றி வளைத்து தாக்கினார்கள்.
இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சபை காவலர்கள் உள்ளே விரைந்து வந்தனர். அதற்குள் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரஷீத்தை மீட்டு காப்பாற்றினார்கள். இதன் காரணமாக சபை ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக ரஷீத் எம்.எல்.ஏ. கூறுகையில்,
நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பது நமது விருப்பம். இதில் கோர்ட்டோ, சட்டசபையோ அல்லது எந்த அமைப்பும் தடை விதிக்க முடியாது என்றார்.