கொட்டதெனியாவ சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 17 வயதான பாடசாலை மாணவன் மற்றும் 31 வயதான நபர் ஆகியோர் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
மினுவாங்கொட நீதவான், டி.ஏ. ருவான் பத்திரண இவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டு, கருத்து வெளியிட்ட நீதவான், விசாரணை நடந்த விதம் நீதிமன்றத்திற்கும் பிரச்சினையாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காவற்துறையினர் ஒரு முறை உத்தரவொன்றை பெறுகின்றனர். புலனாய்வு பிரிவினர் மறுமுறை அதே உத்தரவை பெறுகின்றனர். இந்த இடத்தில் சிக்கல் உள்ளது.
இந்த நிலைமையில், புலனாய்வுப் பிரிவினர் மாத்திரம் விசாரணைகளை நடத்துவது பொருத்தமானது என்பதால், விசாரணைகளை அவர்களிடமே ஒப்படைப்பதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிமால் ரணசிங்க, காவற்துறையினர் மாணவரை தாக்கியுள்ளதாகவும் காவற்துறை நிலையத்தில் வைத்து நிர்வாணமாக படம்பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுவும் சிறுவர் சித்திரவதையாகும். சட்டத்தை பாதுகாக்கும் காவற்துறையினரே இதனை மேற்கொண்டுள்ளனர். பிள்ளையின் உரிமைகளை காவற்துறையினர் மீறியுள்ளனர். மரபணு சோதனையில் இது உறுதியாகியுள்ளது. ஏன் இவ்வாறு செய்கின்றனர். இந்த பிள்ளையின் எதிர்காலத்தை இல்லாமல் செய்துள்ளனர். இதனை காவற்துறையினரே செய்துள்ளனர்.
மாணவனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. மாணவனின் மனித உரிமைகளை காவற்துறையினர் மீறியுள்ளனர். புலனாய்வுப் பிரிவினர் இதனை கூறியுள்ளனர்.
மக்களின் வரிப்பணத்தில் வாழும் காவற்துறையினர் தமது நிர்வாணத்தை மறைக்க நீதிமன்றத்தை ஆடையாக பயன்படுத்தியுள்ளனர். மாணவனை கைது செய்யும் போது காவற்துறையினர் நடந்து கொண்ட விதமும், அவரை விடுவிக்கும் போது நடந்து கொண்ட விதமும் ஆச்சரியமாது. மாணவன் விடுதலை செய்யப்பவது குறித்து அவரது தாய் கூட அறிந்திருக்கவில்லை. ஏன் இப்படி செய்கின்றீர்கள்? என சட்டத்தரணி கேள்வி எழுப்பினார்.
கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே காவற்துறையினர் செயற்பட்டதாகவும் எவருக்கும் அநீதி ஏற்படும் வகையில் விசாரணைகளை நடத்தவில்லை எனவும் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே மாணவன் கைது செய்யப்பட்டதாகவும் கொட்டதெனியாவ காவற்துறை பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.