கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எந்தவொரு வெளித் தரப்பினரும் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியிருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்திய புதுடெல்லியில் இடம்பெற்ற ஹிந்து மற்றும் பௌத்த மத மாநாட்டில் கலந்து கொண்டு, பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இதன்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்தியா செய்மதித் தொழினுட்பத்தின் ஊடாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருடன் தொடர்புகளை பேணி வந்ததா என வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த சந்திரிகா குமாரணதுங்க, கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது எதிர்கட்சியின் உறுப்பினர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள 'வைபர்' தொழினுட்பத்தையே பயன்படுத்தியதாக குறிப்பிட்டார்.
இந்த தொடர்பாடல் முறை தொடர்பாக அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் அறிந்திருக்கவில்லை.
எனவே, அதனூடாக மேற்கொள்ளப்படும் தொடர்பாடல்களை ரகசியமாக செவி மடுக்கும் அளவிற்கு கடந்த அரசாங்க தரப்பினர் முயற்சிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரணதுங்க இந்திய செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.
