புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இஸ்லாமிக் றிலீப் ஸ்ரீலங்கா நிறுவனம் இஸ்லாமிக் றிலீப் ஜெர்மன் நிறுவனத்தின் நிதியுதவியுடன் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகளைக் கொண்டுள்ள மற்றும் வயோதிபர்களைக் குடும்பத் தலைவர்களாகக் கொண்டுள்ள 200 குடும்பங்களுக்கு ஹஜ் பெருநாளைக்கான புத்தாடை பரிசு வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (21) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
இதன்போது அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்களின் உதவியுடன் தெரிவு செய்து வழங்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகளைக் கொண்டுள்ள குடும்பங்கள் மற்றும் வயோதிபர்களைக் குடும்பத் தலைவர்களாகக் கொண்டுள்ள குடும்பங்கள் என தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா 3600.00 ரூபா பெறுமதியான புத்தாடைகள் வழங்கப்பட்டன.
ஹஜ் பெருநாளைக்கான புத்தாடை பரிசு பெறுவதற்காகத் தெரிவு செய்யப்படட குடும்பத் தலைவர், தலைவிகள் அக்கரைப்பற்று றஸ்பாஸ் ஆடையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு 3600.00 ரூபாவிற்குள் தங்களுக்குத் தேவையான ஆடைகளைத் தெரிவு செய்யுமாறு கேட்கப்பட்டதோடு, அவர்கள் விரும்பிய ஆடைகளைத் தெரிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிப் பிரதேச செயலாளர் அஷ்-ஷேய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் கலந்து கொண்டதோடு, அதிதிகளாக இஸ்லாமிக் றிலீப் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி எம்.ஐ.ஸப்ரி உட்பட அதன் உத்தியோகத்தர்கள், சமூகஅபிவிருததி உத்தியோகத்தர் எம்.எச்.ஸியாட் இஹமட், முதியோர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம.ஏ.கைஸ், பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தயோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு புத்தாடைகள் அடங்கிய பொதிகளை வழங்கினார்கள்.





