புனித ரமழான் நோன்பு ஆரம்பமாவதற்கு முன் கல்முனைப் பிரதேசத்தில் சூழவுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் போதியளவு குடிநீரை பெற்றுக் கொள்வதற்கான உடனடி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
கல்முனை பிரதேசத்தில் நீர் விநியோகத்தில் காணப்படும் குறைபாடுகளை ஆராயும் முக்கிய கூட்டமொன்று நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சில் வெள்ளிக்கிழமை (05) முற்பகல் நடைபெற்ற போதே அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.
கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை, சாய்ந்தமருது முதலான பிரதேசங்களில் வழங்கப்படும் நீர்க் குழாய்களின் அழுத்தம் குறைவாக இருப்பது போன்ற காரணிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
கல்முனைப் பிரதேசத்தில் குழாய் நீர் விநியோகத்தில் காணப்படும் இவ்வாறான குறைபாடுகளுக்கு தீர்வு காண்பதற்கும், எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு சீரான நீர் விநியோகம் கிடைப்பதற்கு துரித ஏற்பாடுகளை மேற்கொள்கொள்வதற்குமாக அமைச்சர் இந்த அவசரக் கூட்டத்தை நடாத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் பீ.டபிள்யூ.ஆர்.பாலசூரிய, செயற்திட்ட அதிகாரி பொறியியலாளர் எஸ்.ஏ.ரசீத், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோர் உட்பட உயரதிகாரிகள் இக்கூட்டத்தல் கலந்து கொண்டனர்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
(ஊடகச் செயலாளர்)

