கல்வி என்பது ஒரு மனிதனுடைய புத்தக அறிவை மாத்திரம் இரட்டிப்பாக்குவதன்று மாறாக அவனது பணிகளை வினைத்திறனாக செய்வதற்கான ஆளுமையினை அக்கல்வி அவனுக்கு வழங்க வேண்டும் ஆளுமையற்ற ஒருவனால் உலகில் எதனையும் சாதிக்க முடியாது என்று மருதமுனை புலவர்மணி வித்தியாலத்தில் நடைபெற்ற மாணவர்களின் திறன் விருத்தி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு விரிவுரை வழங்கும் போது தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது ,உளவியலாளர்களின் பார்வையில் ஆளுமை என்பது ஒவ்வொரு தனியாளுமுக்குரிய விஷேடமான ஒன்றிணைந்த, ஒழுங்கமைந்த நடத்தைகளின் தொகுப்பென நோக்கப்படுகின்றது. ஒரு மனிதன் உலகை பார்க்கும் நோக்கத்திலேயே அவனின் நோக்கம், இலக்கு, அவன் விரும்புவவை, விரும்பாதவை, நம்பிக்கை, வாழ்க்கையில் எதிர்பார்ப்பவை ஆகிய அனைத்தும் அடங்குகின்றன. இவற்றில் ஒன்றிலோ பல வற்றிலோ வித்தியாசம் ஏற்படுமாயின் அவனது நடத்தை முறை வேறுபடுவதோடு, ஆளுமையும் வேறுபடுகின்றன. உதாரணமாக வாசிக்கத் தெரியாத ஒரு மாணவன் வாசிக்கக் கற்றுக் கொள்ளும் போது, அவனிடம் புதிய திறமை ஏற்படும். இதனால் அவனது நடத்தையில் மாற்றம் ஏற்படுவதோடு, ஆளுமையிலும் மாற்றம் ஏற்படுகிறது.
அந்த வகையில், ஆளுமை என்பது வளர்ச்சி பெறும் அல்லது அனுபவத்தினால் மாற்றத்திற்குள்ளாகின்ற அல்லது ஓரளவுக்கு மாற்றப்படக்கூடிய ஒன்றென்பது தெளிவாகின்றது.
இக்காலத்தில் மாணவர்களின் நிலையினை எடுத்து நோக்கும் போது பணத்தினை அதிகம் உழைப்பதுதான் கல்வி என்ற குறுகிய ஒரு மனோநிலையில் மாணவர்கள் தமது எதிர்காலத்தினை தீர்மானிக்கின்றார்கள் இக்கல்வி ஒரு பணத்தினை தேடும் பொருளாதார விலங்கினை உருவாக்குமே அன்றி சமுதாயத்திற்குத் தேவையான ஆளுமையுள்ள மனிதர்களை உருவாக்காது என்பதனை மாணவர்களும், மாணவர்களை வழிநடாத்துபவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக மனிதவள உத்தியோகத்தர் கே.எம் றிஸ்வி, பாடசாலை அதிபர் மற்றும் பெரும் தொகையான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

