சமூக சேவை பணிகளில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளதாக நடிகை ஹன்சிகா அறிவித்து உள்ளார்.
ஹன்சிகா ஏற்கனவே ஆதரவற்ற ஏழை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் குழந்தைகள் தத்தெடுப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இதுவரை 23 குழந்தைகளை தத்தெடுத்து உள்ளார்.
இந்த குழந்தைகளுக்கு தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். எல்லோரையும் பள்ளிக்கூடங்களில் சேர்த்து படிக்க வைக்கிறார். அவர்களுக்கான கல்வி கட்டணம் மற்றும் சாப்பாடு செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்கிறார்.
படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும் போதெல்லாம் அவர்களுக்கு புது துணிமணிகள் எடுத்துக் கொடுக்கிறார். தற்போது மேலும் ஐந்து குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளார். விரைவில் அனாதை ஆசிரமங்களுக்கு சென்று இக்குழந்தைகளை தத்தெடுக்க உள்ளார்.
இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, சமூக சேவை பணிகளில் மேலும் தீவிரமாக ஈடுபட முடிவு செய்து இருக்கிறேன். ஆதரவற்றோருக்கு புதிதாக இல்லம் ஒன்று கட்டவும் திட்டம் உள்ளது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளேன் என்றார்.
ஹன்சிகா படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜுலியட்’, சிம்புவுடன் ‘வாலு’ படங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. விஜய்யுடன் ‘புலி’ படத்தில் நடித்துள்ளார். இதன் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. சுந்தர் சி. இயக்கும் ‘அரண்மனை’ 2–ம் பாகத்திலும் நடிக்கிறார்.
