புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 முக்கிய சந்தேகநபர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (01) ஊர்காவல்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் முடிவில் நீதவான் எஸ்.லெனின்குமார் முக்கிய நான்கு உத்தரவுகளை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். அவை வருமாறு,
01.மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்க வேண்டும்.
02.கொலை இடம்பெற்ற இடத்தில் காணப்பட்ட சான்றுகளை நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும்.
03.சந்தேகநபர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று கொழும்பு வெள்ளவத்தையில் இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதால் அவர் 13 அல்லது 14ம் திகதிகளில் வெள்ளவத்தை பகுதி தனியார் வங்கிகளில் பணம் மீளப் பெற்றுக் கொண்டது தொடர்பான சிசிரிவி காட்சிகளை நீதிமன்றில் முன்வைக்க வேண்டும்.
04.சட்ட வைத்திய அதிகாரியிடம் சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்தி இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து அறிக்கை சமர்பித்தல் மற்றும் வேறு கொலை சாட்சியங்கள் இருப்பின் சமர்பித்தல்.
இதேவேளை, வித்தியா படுகொலையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பேரணியின் போது குழப்பம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 129 பேரில் 47 பேர் இன்று யாழ், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
அதில் 45 பேர் எதிர்வரும் 9ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
16 வயதிற்கு கீழ்ப்பட்ட இருவர் தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
