எஸ்.ஆப்தீன்-
இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமானது தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் அவர்களைத் சந்தித்து கலந்துரையாடிய நிகழ்வானது 2015.05.10ஆம் திகதி அதாவது, நேற்று கொழும்பு நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தற்போது எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் ஜனாப். கே.எம்.கபீர் அவர்கள் கலந்து கொண்டு பல ஆக்கபூர்மான பின்வரும் கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தார்.
1. அம்பாறையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ள மோட்டார் சைக்கிளை வழங்க உடனடி நடவடிக்கை எடுத்தல்.
2. கடந்த அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் சுமார் ஒரு வருட காலத்தை பயிற்சிக்காலமாக கழித்துள்ளனர். அதனை சேவைக்காலத்தினுள் உள்ளடக்க நடவடிக்கை எடுத்தல்.
3. அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பள அளவுத்திட்டம் தற்போது எம்.என்-4 ஆகவுள்ளது. இதனை எம.;என்-5ஆக மாற்றுதல்.
4. அரசினால் நடாத்தப்படுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட உயர் மட்ட போட்டிப்பரீட்சைகளில்; அரச சேவையிலுள்ள ஊழியர்கள் தோற்றுவதாயின், 05 வருட சேவைக்காலத்தை பெற்றிருத்தல் வேண்டுமென்ற நியதியை 03 வருடங்களாகக் குறைத்தல்.
இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்ததுடன், அரசாங்கத்தின் நல்லாட்சிக் கொள்கைகள் மற்றும் அதனையொட்டிய திட்ட முன்னெடுப்புக்கள் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இவ்விடயங்களை கவனமாகச் செவிமடுத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் அவர்கள், இது தொடர்பாக அரச உயர் மட்டத்துடன் தொடர்புபட்டு தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
அதிலும், குறிப்பாக முன்னைய அரசாங்கத்தின் மிக மோசமான நிதி கையாள்கை நடவடிக்கைகளினால், தற்போதைய அரசாங்கமானது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதனாலேயே, மீதமாக வழங்க வேண்டியுள்ள மோட்டார் சைக்கிள்களை வழங்குவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளது எனவும், இருந்தாலும், அவற்றை வழங்குவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதற்கு குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு, ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் வேண்டிக்கொண்டார்.(ந)
