முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு எதிராக நாளை காலை 08.30 – 09.30 மணிவரை ஆணைக்குழு முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பிவிதுரு ஹெல உருமய தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக கோத்தபாய நாளைய தினம் மற்றும் 27ஆம் திகதிகளில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உதயகம்மன்பில ஊடகவியலாளரிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாராளுமன்ற பாதையை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் உதயகம்மன்பில உட்பட அரசியல் குழுக்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
அதன் போது மகிந்த ராஜபக்ச, திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு அமைச்சர் பதவி வழங்கியமை தவறு என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுபான்மையுடைய ரணில் விக்ரமசிங்கவிற்கு எவ்வாறு பிரதமர் பதவி வழங்கினார் என உதயகம்மனபில கேள்வியெழுப்பியிருந்தார்.
19ஆம் திருத்தச்சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 26 பேருக்கு பதவி வழங்கியமை இலஞ்சம் இல்லையா என அவர் மேலும் கேள்வியெழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
