எம்.வை.அமீர் -
உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் திகதியை முன்னிட்டு சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலய பிரதி அதிபரும் இளம் சிந்தனையாளருமான நஸ்லின் றிப்கா அன்ஸார் அவர்களிடம் வினவியபோது 'மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்.'
என்ற உயர் வார்த்தையுடன் நீண்ட விளக்கம் ஒன்றை தந்தார் அவர் கூறிய விடயங்களை வாசகர்களுக்காக பதிவிடுகிறேன்.
மார்ச் 8 ஆம் திகதியை உலக மகளிர் தினமாக நாம் கொண்டாடி வருகின்றோம்.
வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும் என்றார்.
மனிதனை வழிநடத்திச் செல்வது கண்கள். நாட்டை ஒளி பெறச் செய்வது பெண்கள். இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது. சர்வதேச மகளிர் தினமாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 18, 1911. ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் 104 வருடங்கள் முடிவடைந்து விட்டதாகவும் பிரெஞ்சுப் புரட்சியின் போதே பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்திரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதித்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.
எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.அப்போது ஆரம்பித்த இந்தப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன.
பெண்கள் தங்கள் பலம் என்னவென்று படிப்படியாக உணரத் தொடங்கினர். 1913 ஆம் வருடம் முதல் மார்ச் 8 சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இத்தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாக கொண்டாடலாம். ஆனால் இத்தினத்துக்கு காரணமான போராட்டங்களும் வெற்றிகளும்
அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமூதாயத்திருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றார்.
மகளிரைத் தமது தாயாகவும், சகோதரி, மனைவி, மகள், உறவுப் பெண் எனக் கொண்டிருக்கும் ஆண் வழிச் சமுதாய ஆண்கள் தமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமான இப்பாலினத்தை உரிய முறையில் நடத்துகின்றோமா எனச்சிந்திக்க கிடைக்கும் நாள் மட்டுமல்ல பெண்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கவும், பெண்கள் தொடர்பான மூட நம்பிக்கைகளை அகற்றவும் அவர்களை அதிக பட்ச விழிப்புணர்வு கொண்டவர்களாகவும் செயல் திறன் உரியவர்களாகவும் மாற்றி அமைக்கும் நாள் இது என்றார்.
இந்த தினம் தங்களது குடும்பம், சமுதாயம், சமூகம், நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ள சாதாரண பெண்களின் முனைப்பை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது.
எமது அயல்நாடான பாரதத்தில் முன்னர் கல்வி கற்றவர் குறைவு. அதிலும் பெண்கள் மிகக் குறைவு. அக்காலகட்டத்தில் வாழ்ந்த ஒளவையார், காரைக்காலம்மையார், அண்டாள் என்னும் புலவர்களின் படைப்புகளால் பெண்மை மேன்மை அடைந்தது என்று கூறலாம். பாரதி வகுத்த புதுமைப் பெண்ணின் தாற்பரியத்தினால் பெண்கள் தங்கள் தடைகளைக் கடந்து முன்னேறினர். பால்ய விவாகம், உடன் கட்டை ஏறுதல், வீட்டினில் வழங்கப்பட்ட சிறைவாசம், வரதட்சனை கொடுமை என்பன தகர்க்கப்பட்டன.
பெண்களின் உயர்விற்கு காந்தியடிகள், பாரதிதாசன், மோகன்ராய் போன்றோர் குரல் கொடுத்தனர். சீர்திருத்தங்களே பெண்மைக்கு ஏற்படும் மாற்றங்கள் எனும் உண்மையை எடுத்துக் காட்டினர். அவ்வழியேதான் பெண்கள் தங்கள் கால் தடங்களைப் பதித்து வருகின்றனர். பெண்கள் தங்கள் முன்னேற்றத்தால் உயர்வு பெற்றாலும் இன்னும்; அவர்கள் முற்றிலுமாக முன்னேற்றமடையவில்லை என்றும் தெரிவித்தார்.
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பெண்கள் முன்னேறியிருப்பது போலத் தோன்றினாலும் இது மிகவும் சிறுபான்மைதான். மூன்றாவது உலகம் என்று சொல்லப்படும் நாடுகளில் பெண்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரியதாகவே இருக்கிறது. பெரும்பான்மையான பெண்கள் தங்களது தினசரி வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகவே அதிகப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பெண்களுக்கு பெண்கள் சுதந்திரம், பாலியல் விடுதலை என்பது புரியாத, அவர்களுக்கு சம்மந்தப்படாத ஒன்றாகவே இருக்கிறது என்றார்.
1975 ஆம் ஆண்டு மெக்ஸிகோ நாட்டில் நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டில் அடித்தட்டுப் பெண்களுக்கும், மேல்வர்க்கப் பெண்களுக்கும் இடையே பூதாகரமான இடைவெளி இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகியது. இந்த அடித்தட்டுப் பெண்களில் பெரும்பாலோர் எழுத்தறிவு இல்லாமலும், போஷாக்கு குறைந்தவர்களாகவும், வளர்ச்சியடையாத கிராமப் பகுதிகளில் இருப்பவர்களாகவும், ஏழ்மையிலும், உடல் நலக்குறைவிலும் சிக்கித் தவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையிலும்கூட வளர்ந்துவரும் நாடுகளான இந்தியா, இலங்கை முதலிய நாடுகளில் பொறுப்பான அரசியல் பொறுப்புகளை பெண்கள் ஏற்று நடத்தி வருவது ஒரு நல்ல அறிகுறியாகவே தெரிகிறது. இதனால் பெண்கள் சுதந்திரம் என்பது ஒரு மேற்கத்திய மந்திரச்சொல்லாக மட்டுமல்லாமல் வளர்ந்துவரும் நாடுகளிலும் எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
ஒரு பெண்பிள்ளை சிறு வயது முதல் வளர்க்கப்படும் சூழலைப் பொறுத்தே அவளுடைய ஆழுமை அமைகின்றது. ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் அடக்கப்பட்டு வளர்க்கப்படும் ஒரு குழந்தையினால் பிற்காலத்தில் தனது உரிமைகளுக்காகப் போராடி வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆழுமை குறைந்தவர்களே நாளடைவில் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
பால்நிலைப்பாடு காரணமாக மகளிர் மிகவும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். பெண்களைத் தாயாக, இல்லாளாக, துணைவியாக, தர்மபத்தினியாக, செவிலித்தாயாக பல்வேறு உருவங்களில் வீட்டிற்குரியவர்களாக ஆக்கிக் கொண்ட சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற வன்முறைகளும் குறைந்தபாடில்லை என்று கூறினாலும் மிகையாகாது.
ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்செயல்களை இல்லாதொழித்தல் தொடர்பான உடன்படிக்கையை இலங்கை 1981 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் பெண்கள் பாரபட்சங்களிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை, அரசியலில் பங்குபற்றுதல், கல்வி, வேலைவாய்ப்பு பெறும் உரிமை போன்ற பல்வேறு உரிமைகளைக் குறிக்கின்றது.
பொதுவாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பெண்களின் நிலை கேள்விக்குறியாக இருந்தாலும் எமது நாட்டைப்பொறுத்த வரையில் ஒரு குறிப்பிடத்தக்க சிறந்த நிலையை அடைந்துள்ளார்கள் என்பதற்கு பல உதாரணங்களைக் கூறலாம் என்றார்.
இலங்கையிலுள்ள பிரதான காவல்துறை நிலையங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான நலத்தை கவனிப்பதற்கு விசேட பிரிவுகள் உள்ளன. பொலிஸ் நிலையங்களிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பிரிவு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்வதை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்கள் பெண் பொலிசாரிடம் முறையிடுதல் இடம்பெறுகிறது.
இது சுமார் ஒரு தசாப்த காலத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. மருத்துவ நிலையங்களில் தாதிமார் மற்றும் ஆசிரியர், ஆயாதொழிலில், குழந்தை வளர்ப்பு மையங்களில் பெண்களுக்கே முதலிடம் தருகின்றனர்.ஆரம்ப பாடசாலைகளில் ஆசிரியைகளாக பெரும்பாலும் மகளிரையே கல்வி அமைச்சு நியமிக்கின்றது. குழந்தைகள் அழுதால்கூட அதனைப் பொறுத்திடும் பண்பு பெண்களிடம் மட்டுமே காண முடிகின்றது. பொதுவாக பாலர்கள் மேல் கோபம் எழாதவாறு பொறுமை காக்க செய்கின்றது. மருத்துவராக, பொறியியலாளராக, துணை வேந்தராக, நீதிபதியாக, பிரதம மந்திரியாக, ஜனாதிபதியாக பல்வேறு அதி உன்னத பொறுப்புக்களிலிருந்து தமது செயற்திறனைக் காட்டி பெருமை பெற்றுத் திகழ்பவள் பெண் ஆவாள்.
அன்றைய கால கட்டத்தில் வாக்குரிமை வழங்கப்படுவது தொடர்பாக கேள்வி எழுந்த போதே பெரும்பாலான ஆண்கள் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தனர். எனினும் அன்றைய பெண்கள் வாக்குரிமைச் சங்கம் அமைத்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை டொனமூர் ஆணைக்குழு முன் சாட்சி அளித்தனர். அதில் வெற்றியும் கண்டனர். 1931ஆம் ஆண்டு இலங்கை சட்ட சபைக்கான முதலாவது பெண் பிரதிநிதி தெரிவானார். என்றும் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெண் பிரதிநிதிகளின் தொகை 12 ஆக அதிகரித்தது. 2004 இல் இலங்கை பாராளு மன்றத்திற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண் உறுப்பினர்கள் தெரிவானார்கள் என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் முதலாவது பெண் பிரதமராக பதவியேற்ற திருமதி சிறிமாவோ பண்டார நாயக்க உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற சிறப்புப் பெயரையும் தட்டிக் கொண்டார். இவ்வாறாக பெண்களின் இன்றைய நிலையை அடுக்கிக் கொண்டே போகலாம். பெண்ணின் உடலமைப்பு இன்னொரு உயிர் ஜனனிக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. இது இறைவன் அவளுக்களித்த கொடையாகும் என்றார்.
உலக மகளிர் தினத்தில் உலகெங்கும் பறந்து வாழும் பெண்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன என்று கேட்டோம் அதற்க்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். எது எவ்வாறிருப்பினும் மனித உரிமைகள், பெண் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு பெண்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். கல்வியை இடைநிறுத்திய பெண்கள் தமது படிப்பை தொடர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும்.
குறிப்பாக பெண் பிள்ளைகள் சிறு வயது முதலே ஆரோக்கியமான சூழலில் வளர்க்கப்பட வேண்டும். மனவலிமையும்; சக்தி நிறைந்தவர்களுமாக பெண் பிள்ளைகளை வளர்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் இவர்கள் அனைத்து உரிமைகளையும் கொண்ட சிறந்த பிரஜைகளாக உருவாக்க முடியும் என்றும் உலகெங்கும் உள்ள பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை சொல்வதாகவும் தெரிவித்தார்.

