பி. முஹாஜிரீன்-
அட்டாளைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட பாலமுனை மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் தேசிய தொழில் முயற்சித் தகைமை - 5ம் மட்டக் கற்கை நெறி (என்.ரி.கியு 5) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தேசிய விவசாயக் கல்லூரி ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அம்பாறை மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.
மேற்படி பயிற்சி நெறி மற்றும் விவசாயக் கல்லூரி ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (23) பாலமுனை மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றபோது கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அம்பாறை மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் மேலும் தெரிவிக்கையில்,
விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்களத்தின் அனுமதியுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தேசிய தொழில் முயற்சித் தகைமை - 5ம் மட்டக் கற்கை நெறிக்கு 40 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. ஒரு வருட தமிழ்மொழி மூல டிப்ளோமாக் கற்கை நெறியாக நடைபெறவுள்ள இக்கற்கை நெறி பாலமுனை மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி நெறியின் முடிவில் இதனை நிறைவு செய்பவர்களுக்கு விவசாயத் திணைக்களத்திலேயே நேரடியாக தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும். தற்போது இப்பயிற்சி நெறியை ஆரம்பிப்பதற்கான அடிப்படை வசதிகள் நிறைவு செய்யப்படாமல் இருப்பதனால் அது தொடர்பான தேவைகளை நிறைவு செய்யும் வகையிலேயே இக்கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் ஒரு வருட கற்கை நெறியாக ஆரம்பிக்கப்படவுள்ள இக்கற்கை நெறி பின்னர், குண்டசாலையிலுள்ள தேசிய விவசாயக் கல்லூரி போன்று பாலமுனையிலும் நிச்சயமாக ஒரு தேசிய விவசாயப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு, இங்கு இரண்டு வருடங்களைக் கொண்ட டிப்ளோமாக் கற்கை நெறிகள் நடாத்தப்படும். இங்கு தேசிய டிப்ளோமா தொழிநுட்ப பாடநெறி நடாத்தப்படவுள்ளதுடன், இதன் பின்னர் விவசாயப் பட்டப் படிப்பினை மேற்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும்.
இவ்விவசாயக் கல்லூரி கிழக்கு மாகாணத்திலேயே முதலாவது விவசாயக் கல்லூரியாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு, திருக்கோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மொழி பேசும் இளைஞர், யுவதிகள் எதிர்காலத்தில் அதிக நன்மை பெறக்கூடியதாக இருக்கும் எனவும் இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செயற்படுத்துவதற்கு இப்பிரதேச மக்கள் தங்களது பங்களிப்புக்களை வழங்க வேண்டமெனவும் விவசாயப் பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.
இப்பாடநெறி ஆரம்பித்தல் மற்றும் விவசாயக் கல்லூரியை ஏற்படுத்தல் போன்றவற்றிற்கான அத்தியவசிய தேவைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதனடிப்படையில் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்திற்கு அருகில் எவ்வித செயற்பாடுமின்றிக் காணப்படும் விதாதா வள நிலையக் கட்டடம் மற்றும் அதனுடன் இணைந்ததாகவுள்ள காணியை இத்திட்டத்திற்குப் பெற்றுக் கொடுப்பதற்கு இங்கு ஆலோசிக்கப்பட்டது. மேலும் இதனூடாக இப்பிரதேசம் பெரும் நன்மையடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலில், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. சனீர், விவசாய பண்ணை முகாமையாளர் எம்.வை.எம். நியாஸ், விவசாயப் போதனாசிரியர் எம்.ரி.ஏ. கரீம் மற்றும் பாலமுனை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களான கலாபூஷணம் எம்.எல்.எம். பாறூக், எஸ். ஆப்தீன், எம்.எஸ். உபைதுல்லா, கிராம சேவை உத்தியோகத்தர்களான எம்.எஸ்.எம். இப்றாஹீம், ஐ.எல். முனாஸ், எம்.ஐ.எம். றியாழ் உட்பட பலர் கலந்து கொண்டதுடன், இதற்கென அடையாளங் காணப்பட்ட இடத்தினையும் சேதமடைந்துள்ள விதாதா வள நிலையக் கட்டடத்தினையும் பார்வையிட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)