இறுதி யுத்தத்தில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போன தனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் துண்டு பிரசுரத்தில் காணப்படுவதாகவும், அவளை எப்படியாவது கண்டுபிடித்து தருமாறும், உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார் தாய் ஒருவர்.
வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற காணாமல்போனோரின் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்தார்.
அந்தத் தயார் மேலும் கூறுகையில், 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மாத்தளன் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் எனது மகள் பிடித்து செல்லப்பட்டாள். அப்பொழுது அவளுக்கு 17 வயது.
எனது மகள் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டாள் என்பதை அவளுடன் நின்ற பிள்ளை என்னிடம் கூறினாள். நான் எனது மகளைத் தேடிச் செல்லாத இடமே இல்லை. எனது மகளை இராணுவம் பிடித்து செல்லவில்லை என்றுதான் கூறுகிறார்கள்.
ஆனால் சிறிது காலத்திற்கு பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் எனது மகள் கொழும்பிலுள்ள ஒரு பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறாள். அவளை வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறினார்கள்.
நான் போவதற்கு ஆயத்தமாகிய போது மறுநாள் அதே தொலைபேசி அழைப்பிலிருந்து அது உங்களுடைய மகள் இல்லை என்று கூறினார்கள். நான் கதைத்துக் கொண்டு இருந்த போது தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்கள். நான் மீண்டும் முயற்சித்த போது அந்த இலக்கம் இயங்கவில்லை.
பின்னர் தேர்தல் காலங்களில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் துண்டுப் பிரசுரத்தில் எனது மகளை கண்டேன். எனது மகளை எனக்குத் தெரியும். அவள் உயிருடன்தான் இருக்கிறாள். எனவே எனது மகளை மீட்டுத் தாருங்கள்.என அந்த கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தார்.
